டெல்லி நொய்டா சட்டவிரோத இரட்டை கோபுரம்..328 அடி உயர கட்டிடம்- 9 நொடிகளில் தகர்ந்தது!
டெல்லி: டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 328 அடிய உயரம் கொண்ட 32 மாடி இரட்டை கோபுர கட்டிடம் இன்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் 9 வினாடிகளில் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.
நொய்டாவில் சூப்பர் டெக் நிறுவனத்தால் அபெக்ஸ், செயேன் என்ற இரட்டை மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டன. 328 அடி உயரத்தில் 32 மாடிகளுடன் கட்டப்பட்ட நொய்டா இரட்டைக் கோபுரம் என்ற இந்த கட்டிடம், உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டது. இதனால் உச்சநீதிமன்றம் இந்த கட்டிடத்தைத் தகர்க்க உத்தரவிட்டது.
இதனையடுத்து இன்று பிற்பகல் இந்த 328 அடி உயர இரட்டை கோபுர கட்டிடம் தகர்க்கப்பட்டது. இத்தகைய கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக ஆண்டுகள் கணக்கு எடுத்துக் கொள்ளும். ஆனால் நவீன தொழில்நுட்ப முறையில் 9 வினாடிகளில் இந்த கட்டிடம் தகர்க்கப்பட்டது.
இந்த கட்டிடத்தில் மொத்தம் 25,000 துளைகள் இடப்பட்டன.. இந்த துளைகளில் 3,700 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்டன. இத்துளைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டன.
கட்டிட இடிப்புக்கான நேரத்தில் ஒரே நேரத்தில் அனைத்து வெடிபொருட்களும் வெடிக்க வைக்கப்பட்டன.. இதனால் ஒட்டுமொத்த கட்டிடமும் 9 வினாடிகளில் தரைமட்டமாகின.
நொய்டாவின் செக்டார் 93A இல் 2004-ம் ஆண்டு சூப்பர்டெக் எமரால்டு கோர்ட் ஹவுசிங் சொசைட்டி என்ற பெயரில் பிரம்மாண்ட கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் 9 மாடிகளுடன் 14 கோபுரங்களுடன் கட்டிடம் கட்டுவதற்கு நொய்டா உள்ளாட்சி நிர்வாகம் அனுமதித்தது. ஆனால் 2012-ம் ஆண்டு இந்த திட்டம் அப்படியே திருத்தப்பட்டு 40 மாடிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிராக குடியிருப்போர் சங்கத்தினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 2014-ம் ஆண்டே இந்த சட்டவிரோத கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.
அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனடிப்படையில் உச்சநீதிமன்றமும் இந்த சட்டவிரோத கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது. இக்கட்டிடம் கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி இடிப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இடிக்கப்பட்டது.
கொச்சியில் 2020-ம் ஆண்டு இதேபோல பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிக்கப்பட்டது. இந்த பணியை தமிழ்நாட்டின்விஜய் ஸ்டீல்ஸ் அண்ட் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.