செம புலன் விசாரணை.. காப்பீட்டு ஏஜென்டாக மாறிய போலீஸ்! கொலை வழக்கில் 25 ஆண்டுக்கு பின் டிரைவர் கைது
டெல்லி: டெல்லியில் நடந்த கொலை வழக்கில் கொலை செய்த நபர் பற்றிய எந்த தடயமும், ஆதாரமும் இல்லாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் காப்பீட்டு ஏஜென்ட் போல் நடித்து விசாரணை நடத்தி 25 ஆண்டுக்கு பிறகு கொலையாளியை கைது செய்துள்ளனர்.
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது பழமொழி.. இந்தியாவில் கொலை, கொள்ளை, திருட்டு உள்பட பிற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை பற்றி போலீசார் விசாரணை நடத்தி அதிரடியாக கைது செய்கின்றனர்.
இருப்பினும் சில வழக்குகள் போலீசாருக்கு பெரும் சவாலாக இருக்கும். அதாவது குற்றம் புரிந்த நபர் நீண்டகாலமாக போலீசாரின் கைகளில் சிக்காமல் டிமிக்கி கொடுத்தபடி இருப்பார். அந்த வகையில் தான் டெல்லியில் கொலை செய்த நபர் 25 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் இருந்தார். அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:

1997ல் கத்தியால் குத்திக்கொலை
டெல்லி துக்ளகாபாத் பகுதியில் வசித்து வந்தவர் கிஷான் லால். இவரது மனைவி பெயர் சுனிதா. கடந்த 1997 ம் ஆண்டில் சுனிதா கர்ப்பிணியாக இருந்தார். இந்த வேளையில் கிஷான் லால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திமார்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிஷான் லாலின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராமு என்பவர் கொலை நடந்த பிறகு மாயமாகி இருந்தது தெரியவந்தது.

கிடப்பில் கிடந்த வழக்கு
இதனால் ராமு தான் கிஷான் லாலை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ராமு பற்றிய விபரங்கள் சுனிதா உள்பட அங்கு வசித்தவர்களுக்கு தெரியவில்லை. இது போலீஸ் விசாரணைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதோடு அவர் எங்கு இருக்கிறார் என்பதையும் போலீசாரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதனால் இந்த வழக்கு கிடப்பிலேயே இருந்தது.

25 ஆண்டுகளுக்கு பின் கைது
இதற்கிடையே கர்ப்பிணியாக இருந்த சுனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சன்னி என பெயரிடப்பட்டது. தற்போது சுனிதாவின் மகனுக்கு 24 வயது ஆகிறது. இந்நிலையில் தான் சுனிதாவின் கணவரும், சன்னியின் தந்தையுமான கிஷான் லால் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த ராமுவை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டு கிஷான் லாலை, ராமு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையே தான் கிஷான் லால் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை போலீசார் கைது செய்தது பற்றிய சுவாரசியமான சம்பவம் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மீண்டும் விசாரிக்க முடிவு
டெல்லியின் வடக்கு மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நீண்டகாலமாக தீர்வு காண முடியாமல் கிடப்பில் உள்ள வழக்குகளை மீண்டும் தூசித்தட்டி விசாரிக்க 2021 ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்டது. அப்போது தான் மீண்டும் கிஷான் லால் வழக்கை மீண்டும் போலீசார் கையில் எடுத்தனர். 4 பேர் அடங்கிய குழுவை வழக்கிற்காக நியமித்தனர். இந்த குழுவானது உதவி போலீஸ் கமிஷனர் தர்மேந்தர் குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் சிங் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் யோகேந்திர சிங், தலைமை காவலர்கள் புனித் மாலிக், ஓம்பிரகாஷ் தாகூர் ஆகியோருடன் செயல்பட்டது.

காப்பீட்டு ஏஜென்டாக போலீஸ்
நேரில் பார்த்த சாட்சி இல்லை. குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ராமு பற்றிய விபரங்கள் இல்லாததால் இது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. இதற்கிடையே தான் போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதன்படி ஆயுள்காப்பீட்டு ஏஜென்டுகளாக போலீசார் டெல்லி உத்தம் நகருக்கு சென்றனர். அப்போது அங்கு ராமுவின் உறவினர்களாக கூறப்படும் நபர்களுக்கு பணம் உதவி வழங்குவது போல் போலீசார் பேசினார்.

மகனின் செல்போன் எண்
அப்போது உத்தர பிரதேச மாநிலம் பாருக்காபாத் மாவட்டத்தில் உள்ள கானாப்பூர் கிராமத்தில் ராமுவின் உறவினர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் போலீசாருக்கு ராமுவின் மகன் ஆகாசின் செல்போன் எண் கிடைத்தது. இதையடுத்து அந்த செல்போன் எண்ணை பயன்படுத்தி அவரது பேஸ்புக் கணக்கை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை கண்காணித்து வந்தனர். அதன்பிறகு ஆகாஷ் லக்னோவில் உள்ள காபூர்தாலா பகுதியில் வசிப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஆகாசை பிடித்து விசாரித்தனர்.

இ-ரிக்சா ஓட்டுவதாக..
இந்த விசாரணையின்போது அவர் தனது தந்தையை பார்த்து பல ஆண்டுகள் ஆகியிருப்பதாக தெரிவித்தார். அதோடு தனது தந்தை தற்போது ராமு என்ற பெயரில் இல்லாமல் அசோக் யாதவ் என்ற பெயரில் வாழ்ந்து வருவதாகவும், அவருடன் நீண்டகாலமாக தொடர்பு இல்லை எனவும் தெரிவித்தார். இருப்பினும் லக்னோவின் ஜான்கிபுரம் பகுதியில் அவர் இ-ரிக்சா ஓட்டுவதாக கேள்விப்பட்டு இருக்கிறேன் என்று கூறினார்.

தட்டித்தூக்கிய போலீஸ்
இதையடுத்து மத்திய அரசின் இ-ரிக்சா திட்ட ஏஜென்ட்களாக போலீசார் மாறி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். இறுதியாக 2022 செப்டம்பர் 14ம் தேதி ரயில் நிலையம் அருகே வசித்து வந்த ராமு என்ற அசோக் யாதவை போலீசார் கைது செயத்னர். முதலில் தான் ராமு இல்லை என மறுத்த அவர் அதன்பிறகு ஒப்புக்கொண்டார். மேலும் அவர் தான் ராமு என்பதை உறுதி செய்ய பாருக்காபாத் மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர் மற்றும் கொலையான கிஷான் லாலின் மனைவி ஆகியோரை அழைத்து அடையாளம் காட்ட செய்தனர். இதன்மூலம் அசோக் யாதவ் தான் ராமு என்பதை உறுதி செய்து கைது போலீசார் கைது செய்தனர்.

சீட்பண்ட் பணத்துக்காக...
மேலும் 1997 ல் சீட்பண்ட் தொடர்பான பணத்தை கைப்பற்றும் நோக்கத்தில் ராமு, கிஷான் லாலை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதற்காக 1997 பிப்ரவரி 4ம் தேதி கிஷான் லாலுக்கு பார்ட்டி கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. ராமு போலீசில் சிக்கியதன் மூலம் போலீசார் நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளனர். 25 ஆண்டு துப்பு கிடைக்காமல் இருந்த வழக்கை போலீசார் வெற்றிக்கரமாக முடித்துள்ளனர். இந்த தகவலை டெல்லி வடக்கு மாவட்ட துணை போலீஸ் கமிஷனர் சாகர்சிங் கல்சி கூறினார். மேலும், அவர் கூறுகையில், ‛‛கிஷான் லால் கொலை வழக்கு துப்பு கிடைக்காமல் நீதி கிடைக்காமல் இருக்கும் என அவரது மனைவி சுனிதா நினைத்தார். இந்நிலையில் தான் கொலையாளியை கைது செய்துள்ளோம்'' என்றார். திமார்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications