குட் நியூஸ்.. டெல்லியில் குறைந்த கொரோனா அலை! ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்- துணை முதல்வர்
டெல்லி: டெல்லியின் ஆக்ஸிஜன் தேவை குறைந்துவிட்டது, எனவே கூடுதல் ஆக்சிஜனை, தேவைப்படும் பிற மாநிலங்களுக்கும் கொடுக்கலாம், என்று துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா இன்று தெரிவித்தார்.
"ஆக்ஸிஜன் தேவை குறைந்து, மருத்துவமனை படுக்கைகள் காலியாகி வருகின்றன. அந்த நேரத்தில் (15 நாட்களுக்கு முன்பு), எங்களுக்கு 700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. இப்போது, டெல்லிக்கான, ஆக்ஸிஜன் தேவை ஒரு நாளைக்கு 582 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது .

நாங்கள் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளோம், ஒரு நாளைக்கு 582 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனைக் கொண்டு எங்கள் பணிகள் செய்யப்படும் என்றும், எனவே, டெல்லியின் ஒதுக்கீட்டிலிருந்து உபரி ஆக்ஸிஜனை மற்ற மாநிலங்களுக்கு வழங்க முடியும் என்றும் கூறியுள்ளோம்" என்று சிசோடியா தெரிவித்தார்.
மேலும், கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையால் கொரோனா கேஸ் எண்ணிக்கை அதிகரித்தபோது, டெல்லி துன்பத்தில் இருந்தது. அப்போது, டெல்லி மக்கள் உதவிக்கு வந்தமைக்கு மத்திய அரசு மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு நன்றி என்றும் தெரிவித்தார்.
டெல்லி கடந்த 24 மணி நேரத்தில் 10,400 புதிய கொரோனா கேஸ்களை பதிவு செய்துள்ளது, இது நேற்றைய புள்ளிவிவரங்களை விட 21 சதவீதம் குறைவாகும். பாசிட்டிவ் ரேட் விகிதம் 14 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலதிக உத்தரவு வரும் வரை ஒவ்வொரு நாளும் 700 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை டெல்லிக்கு வழங்குமாறு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லியிலுள்ள பல உயர்தர மருத்துவமனைகளில் கூட ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டன. இது பல நோயாளிகளின் மரணத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும் இப்போது நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications