ஜியு போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் 'பக்தி' மிஸ்ஸிங்.. ஆளுநர் ஆர்என் ரவி புது குற்றச்சாட்டு
டெல்லி: ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பிலிருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது. பக்தி என்பதை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தவிர்த்துள்ளனர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி லோதி தோட்டத்தில் உள்ள டெல்லி தமிழ் கல்விக்கழக பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
இதனையடுத்து அவர் ஆற்றிய சிறப்புரையில் மேற்குறிப்பிட்டதைக் கூறியுள்ளார். சமீப நாட்களாக பக்தி குறித்து ஆளுநர் தனது உரையில் அடிக்கடி குறிப்பிட்டு வரும் நிலையில் தற்போதைய அவரது சிறப்புரையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
6 மாதத்தில் 70 கொலைகள்! காவிரி டெல்டாவில் ஓடும் “ரத்த ஆறு”.. அன்புமணி வெளியிட்ட அதிர வைக்கும் டேட்டா
சிலை திறப்பு
டெல்லி லோதி தோட்டத்தில் உள்ள டெல்லி தமிழ் கல்விக்கழக பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இதன் பின்னர் இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய அவர், "இந்த விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது வருங்கால தூண்களான மாணவர்களையும், அவர்களை உருவாக்கிய ஆசிரியர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். டெல்லி தமிழ் கல்விக்கழக பள்ளிகளின் நூற்றாண்டு விழா காணுகிறது, அதற்கு வாழ்த்துகளையும், மேன்மேலும் வளரவும் வாழ்த்துகிறேன்" என்று தனது உரையை தொடங்கினார்.
திருக்குறள்
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி. தற்போது திருக்குறள் என்பது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாகச் சுருங்கிவிட்டதாகக் கருதுகிறேன், ஆனால் திருக்குறள் என்பது அதற்கு மேலானது. திருக்குறள் என்பது பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது. தமிழ்நாடு ஆளுநராக நான் பதவியேற்ற பின்னர் எனக்குத் திருக்குறள் புத்தகம் அதிக அளவில் பரிசாகக் கிடைத்தது.
மொழிபெயர்ப்பு
அதில் பெரும்பாலானது ஜி.யு.போப் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்புதான். இவரின் மொழிபெயர்ப்புதான் திருக்குறளின் சிறந்த மொழிபெயர்ப்பு. தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் மிக மிகப் பழமையானது. இப்படியான பழமையான மொழியில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே யோக கலையின் முக்கியத்துவத்தைத் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஒரு சந்தையாகவும், கலாச்சாரம் இல்லாத நாடாகக் காட்ட முயன்றனர். ஆனால், இந்தியா அவ்வாறு இல்லை, இந்தியா கலாச்சாரம் நிறைந்த, பண்பட்ட சமூகமாக அப்போதே இருந்துள்ளது.
வேண்டும் என்று தவிர்ப்பு
அதேபோல இந்திய நூல்களின் மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விடுத்து உண்மையான பொருட்களை வெளிக்கொணர வேண்டும். உதாரணமாக ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பிலிருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் பொதுவாகிய ஆதிபகவன் என்பதை மொழிபெயர்ப்புகளில் தவிர்த்துள்ளனர், பக்தி என்பதை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திருக்குறளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது" என்று தனது உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.