தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும்.. தாக்கும் டெல்டா கொரோனா வகை.. எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டெல்லி: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனாவுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களையும் தாக்கும் திறன் இருப்பது எய்ம்ஸ் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாகவே உச்சத்திலிருந்தது. தினசரி கொரோனா பாதிப்புகள் நான்கு லட்சம் வரை சென்றது.
நாட்டில் கொரோனா பாதிப்பு கையை மீறிச் செல்வதற்கு உருமாறிய கொரோனா வைரசே காரணம் எனக் கூறப்பட்டது.

டெல்டா வகை கொரோனா
அதிலும் குறிப்பாக இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா மிக மோசமான பாதிப்புகளை இந்தியாவில் ஏற்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த புதிய டெல்டா வகை கொரோனா குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள புதிய ஆய்வுகளும் நடத்தப்பட்டன.

புதிய ஆய்வு
இந்நிலையில் உருமாறிய கொரோனா குறித்து எய்ம்ஸ் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தனித்தனியாக நடத்திய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வகையைக் காட்டிலும் 40 முதல் 50% வரை டெல்டா வகை கொரோனா வேகமாகப் பரவுவதாக எய்ம்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மத்தியிலும் டெல்டா கொரோனா வகையின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் ஆய்வு
எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 63 நோயாளிகளிடம் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 53 பேர் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் என இரண்டில் எதாவது ஒரு தடுப்பூசி டோஸை செலுத்திக் கொண்டவர்களாகும். மேலும், 36 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்களாகும். அதாவது கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் எடுத்துக் கொண்ட 76.9% பேர், இரண்டு டோஸ் எடுத்துக் கொண்ட 60% பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம்
அதேபோல தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் நடத்திய ஆய்விலும் கோவிஷீல்டு எடுத்துக் கொண்டவர்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிந்தனர். கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 70% பேருக்கு டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்த இரண்டு ஆய்வுகளும் நமக்கு உணர்த்துவது ஒன்று தான்.

தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் தாக்கும்
அதாவது கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களையும் டெல்டா வகை கொரோனா தாக்கம் திறனைக் கொண்டுள்ளது. பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனாவும் தடுப்பூசியிலிருந்து தப்பிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றாலும் அது டெல்டா வகை கொரோனா அளவுக்குத் தடுப்பூசிகளிலிருந்து தப்பவில்லை. சுருங்கச் சொன்னால், டெல்டா மற்றும் ஆல்பா கொரோனா வகைகளுக்கு எதிராகத் தடுப்பூசியின் செயல் திறன் குறைகிறது என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகிறது.

உயிரிழப்புகள் அதிகரிக்கிறதா?
இருப்பினும், தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதை 2 வகை கொரோனாவும் சிறப்பாகவே கட்டுப்படுத்துகிறது. அதாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களையும் டெல்டா வகை கொரோனா தாக்கும் என்றாலும், அவை உயிரிழப்புகளை அதிகப்படுத்தும் அளவுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. எனவே, தடுப்பூசிகளை அதிகளவிலான மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications