24 மணி நேரத்தில் எடுத்த முடிவு.. பணமதிப்பிழப்பு நடவடிக்கையே தவறு! தனி நபராக எதிர்த்த பெண் நீதிபதி!
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறு. இது மிகவும் சீரியசான விஷயம். இதில் அரசு வெறுமனே அரசாணை வெளியிட்டு முடிவு எடுப்பது தவறு. இதற்காக முறையாக சட்டம் இயற்றி இருக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பிவி நாகரத்னா தனி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
2016ம் வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இந்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது.
முடிந்துபோன விஷயம்.. கிளற வேண்டாம்.. பணமதிப்பிழப்பு வழக்கில் மத்திய அரசு வாதம்
காங்கிரஸ்
காங்கிரஸ் எம்பி மூத்த வழக்கறிஞர் ப. சிதம்பரம் வைத்த வாதம் உட்பட பல மூத்த வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் தீவிரமாக வாதம் வைத்தனர். மத்திய அரசு இதில் வைத்த வாதத்தில் ஆர்பிஐ அமைப்புடன் முறையாக ஆலோசனை செய்துதான் இதில் முடிவுகளை எடுத்தோம். ஆர்பிஐ பரிந்துரை அடிப்படையில்தான் முடிவுகளை எடுத்தோம். இதில் காலத்தை பின்னோக்கி கொண்டு செல்ல முடியாது. ஏற்கனவே உடைக்கப்பட்ட முட்டையை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்று வாதம் வைத்தது. டிசம்வர் 7ம் தேதி இந்த வழக்கில் வாதங்கள் முடிந்து தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது. நாளை மறுநாள் ஓய்வு பெறும் நீதிபதி எஸ்ஏ நசீர் தலைமையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.
வழக்கு
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்று இருந்தனர். இந்த வழக்கில் 2 தீர்ப்புகள் வழங்கப்பட்டன. நீதிபதி எஸ்ஏ நசீர், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கினார். பி.வி.நாகரத்னா தனியாக ஒரு தீர்ப்பை வழங்கினார். நீதிபதி எஸ்ஏ நசீர், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகிய நான்கு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தெரிவித்தனர்.
வாதம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை முறையாக ஆலோசனை செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆர்பிஐ அமைப்புடன் ஆலோசனை செய்துள்ளனர். மத்திய அரசுக்கு பண மதிப்பை நீக்கம் செய்யும் அதிகாரம் உள்ளது. கள்ள நோட்டு, கருப்பு பணங்களை ஒழிக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதேபோல் 52 நாட்கள் பணத்தை மாற்றிக்கொள்ள மக்களுக்கு நேரம் கொடுக்கப்பட்டது. அதனால் இந்த நடவடிக்கை தவறு என்று சொல்ல முடியாது. இது போன்ற மத்திய அரசு சிறப்பு முடிவுகளில் நாங்கள் தலையிட முடியாது என்று தீர்ப்பு வழங்கினர்.
தீர்ப்பு
5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியதால், இந்த தீர்ப்பு இறுதியானதாக எடுத்துக்கொள்ளப்படும். அதே சமயம் நீதிபதி பிவி நாகரத்னா பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறு என்று தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், இது மிகவும் சீரியசான விஷயம். இதில் அரசு வெறுமனே அரசாணை வெளியிட்டு முடிவு எடுப்பது தவறு. இதற்காக முறையாக சட்டம் இயற்றி இருக்க வேண்டும். இது நல்ல விஷயங்களை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம். ஆனால் சட்டப்படி இதை கேள்வி கேட்க வேண்டும். இதை சட்டத்திற்கு புறம்பாக செய்துள்ளனர்.
தனி தீர்ப்பு
முறையாக சட்டம் வழியாக செய்து இருக்க வேண்டும். சட்டம் மத்திய அரசுக்கு குறிப்பிட்ட சீரியஸ் பணத்தை குறிப்பிட்ட அளவு மட்டுமே மதிப்பிழக்கம் செய்ய வழி வகுக்கிறது. ஆனால் மொத்தமாக பணத்தை மதிப்பிழப்பு செய்ய பவர் கொடுக்கவில்லை. அதோடு ஆர்பிஐ அமைப்பு இதில் பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசின் பரிந்துரையை ஆர்பிஐ ஏற்றுக்கொண்டது. இதை ஆர்பிஐயின் பரிந்துரையாக ஏற்றுக்கொள்ள முடியாது. வெறும் 24 மணி நேரத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர். ஆனாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு வருடங்கள் ஓடிவிட்டதால் இதில் இழப்பீடுகளை வழங்க முடியாது, என்று பிவி நாகரத்னா தெரிவித்துள்ளார்.