ஆளுநருக்கு எதிராக திமுக அதிரடி மூவ்.. ஒரு பஞ்சாயத்து மெம்பருக்கு கூட தகுதி இருக்கு! விளாசிய வில்சன்!
டெல்லி : மாநில ஆளுநர்களை தகுதி நீக்கம் செய்ய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யக்கோரும் தனிநபர் மசோதாவை திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
ஒரு பஞ்சாயத்து உறுப்பினருக்கு கூட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போது, ஒரு மாநிலத்தின் ஆளுநரை தேர்வு செய்வதற்கு குறைந்தபட்ச தரநிலை எதுவும் அமைக்கப்படவில்லை என அந்த மசோதாவில் குறிப்பிட்டுள்ளார் திமுக எம்.பி. வில்சன்.
தமிழக அரசின் 22 மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள ஆளுநருக்கு எதிராக வலிமையான அஸ்திரங்களை திமுக கையில் எடுத்து வருவது அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை: முஸ்லிம் அமைச்சர், ஆளுநர்களை டிஸ்மிஸ் செய்ய கோரி பவுத்த பிக்கு தொடர் போராட்டம்
கிடப்பில் போட்ட ஆளுநர்
ஆன்லைன் சூதாட்டத்தால் 30க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றியது தமிழக அரசு. ஆனால் அதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். உடனடியாக தடை செய்யப்பட வேண்டிய இந்த விவகாரம் தொடர்பான மசோதா மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அதேபோல் 22 மசோதாக்கள் தமிழக ஆளுநர் மாளிகையில் முடங்கி கிடக்கிறது.
தொடர் மூவ்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளிட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும் ஆளுநர் ரவி, இதில் காலம்தாழ்த்தி வருவதால் திமுக உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. இந்நிலையில் தான் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி வருகிறது திமுக. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான மூவ்களை தொடர்ச்சியாக எடுத்து வைத்து வருகிறது திமுக. முன்னதாக, குடியரசுத் தலைவரிடமும் ஆளுநர் ரவியை திரும்பப் பெற கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விவாதிக்க அனுமதி மறுப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் டிசம்பர் 8ஆம் தேதி மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக பேச அனுமதி கேட்டார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தனிநபர் மசோதா
இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று திமுக எம்பி வில்சன் ஆளுநர் தொடர்பான தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'ஆளுநர்களை நியமிக்கும் முறையிலும், நீக்கும் முறையிலும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். தகுதியான நபர்கள் மட்டுமே ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர் செயல்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டால் அவரை தகுதி நீக்கம் செய்ய வழிமுறை வகுக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அரசியல் சாசன பிரிவு 102, 155, 156 ஆகியவற்றில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாயத்து உறுப்பினருக்கு கூட
மேலும், மாநில ஆளுநர்கள் தனி அரசாங்கம் நடத்துகிறார்கள். மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், மக்களின் விருப்பத்தை தடுக்கிறார்கள், எனவே தகுதியான நபர்கள் மட்டுமே ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும், ஒரு பஞ்சாயத்து உறுப்பினருக்கு கூட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போது, ஒரு மாநிலத்தின் ஆளுநரை தேர்வு செய்வதற்கு குறைந்தபட்ச தரநிலை எதுவும் அமைக்கப்படவில்லை என்பது சரியானதல்ல.
விருப்பு வெறுப்பு இன்றி
ஒரு ஆளுநரின் மனம் அரசியல் விருப்பு வெறுப்புகள், கட்சி அரசியல் அல்லது அவரது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு எதிர்கால நியமனங்கள் பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும். அவரது முழு அர்ப்பணிப்பும் மாநிலத்தின் நலனுக்காகவும், அரசியலமைப்பு இலக்குகள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்பவும் தனது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதில் இருக்க வேண்டும் என்றும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.