ஜாக்குவார் கார்.. கனிமொழி வீட்டில் சமையல்.. மலைக்கோயில் அர்ச்சகர் சந்திப்பு! சுழன்ற துர்கா ஸ்டாலின்
டெல்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்குப் போய், பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களை அடுத்தடுத்த நாட்களில் சந்தித்து அனலை கிளப்பியிருந்தார்.
சென்னை திரும்பிய ஸ்டாலின் இப்போது ஊரடங்கு தளர்வுகள் குறித்தும், கொரோனா கட்டுப்பாடு குறித்தும் அடுத்தடுத்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையிலும், ஸ்டாலினின் டெல்லி பயணம் பற்றிதான் திமுகவினரிடையே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
காஷ்மீர் விவகாரம்.. பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.. முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
டெல்லி சென்ற துர்கா ஸ்டாலின்
அதிலும் குறிப்பாக, ஸ்டாலினுடன் அவர் மனைவி துர்கா ஸ்டாலின் டெல்லி சென்றது டாக் ஆப்தி டவுன். முன்னாள் முதல்வர், கருணாநிதி டெல்லி சென்ற காலகட்டங்களில் அவரோடு மனைவி தயாளு அம்மாள் சென்றது கிடையாது. ஆனால் ஸ்டாலினுடன் ஏன் துர்கா செல்கிறார். டெல்லியில் என்ன விஷேசம் என்றெல்லாம் ஆர்வம் அதிகரித்துவிட்டது திமுகவினருக்கு.
உடல்நிலையில் கவனம்
ஆனால் துர்கா ஸ்டாலின், டெல்லி சென்றதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறதாம். அது குறித்த தகவல்கள் தான் தற்போது வெளியாகியுள்ளன. முதல்வரான பிறகு ஸ்டாலின் தனது உடல்நிலையில் உரிய கவனம் எடுப்பதில்லை. மாத்திரை மருந்துகளை நேரம் பார்த்து போடுவதில் அவர் கவனம் செலுத்துவது இல்லையாம். எனவே இதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்காகவே துர்கா டெல்லி சென்றதாகவும் ஒரு தகவல் உள்ளது.
தனி காரில்
டெல்லி சென்றதுமே, துர்கா ஸ்டாலினுக்கு ஜாக்குவார் நிறுவனத்தின் கருப்பு நிற சொகுசு கார் வரவழைக்கப்பட்டு அதில்தான் அவர் பயணித்தார். முதல்வர் தனது அரசு வாகனத்தில் பயணித்தார். பிறகு தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் தங்கியிருந்தார். ஆனால் அவருக்கு பிரத்தியேகமாக உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. வெளியில் தயாரித்த உணவுகளை ஸ்டாலினுக்கு வழங்கவில்லையாம்.
கனிமொழி இல்லத்தில் சமையல்
டெல்லி ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் ஸ்டாலினுக்குத் தேவையான உணவுகளை தயாரிக்க ஏற்பாடு செய்துள்ளார் துர்கா. அங்கே தயார் செய்யப்படும் உணவுகளைத் தமிழ்நாடு இல்லத்திற்கு கொண்டு வந்து துர்கா ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதனால் தமிழ்நாடு இல்லத்திற்கும் கனிமொழி வீட்டுக்குமாக காரில் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தபடி இருந்துள்ளார் துர்கா ஸ்டாலின்.
சிறப்பு பூஜைகள்
இன்னொரு பக்கம், டெல்லியில், ஸ்டாலினுக்காகச் சிறப்பு பூஜை செய்துள்ளார் துர்கா. டெல்லி ராமகிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ உத்தர சுவாமி மலையில் ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ சுவாமிநாத சுவாமி, ஸ்ரீ சுந்தரேஸ்வரர், தேவி மீனாட்சி, நவகிரக சன்னதி, ஸ்ரீ இடும்பன் சன்னிதி, ஸ்ரீ ஆதி சங்கர ஹால், சில்ப கலா மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த கோவிலுக்கு நாடு முழுக்க இருந்து பக்தர்கள் வருவார்கள். புகழ் பெற்ற இந்த கோவிலின் அர்ச்சகரை, துர்கா ஸ்டாலின் சந்தித்துள்ளார். அப்போது ஸ்டாலினின் ஆட்சியில் தமிழகம் வளம் பெற வேண்டியும், நீண்ட ஆயுள், ஆரோக்கியத்தோடு ஸ்டாலின் திறம்படச் செயல்பட வேண்டியும், துர்கா ஸ்டாலின் சிறப்புப் பூஜைகள் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தம், கணவரோடு நிழல்போல இருந்து, செயலாற்றியுள்ளார் துர்கா ஸ்டாலின்.