2022-ன் தொடக்கத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல்களை வெற்றிகரமாக நடத்த முடியும்: தேர்தல் ஆணையம் நம்பிக்கை
டெல்லி: 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளின் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு சுஷீல் சந்திரா அளித்த பேட்டி:
பீகார், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, புதுவை, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் கொரோனாவுக்கு மத்தியில்தான் தேர்தலை நடத்தினோம். கொரோனா 2-வது அலையால் ஒத்திவைக்கப்பட்ட சில லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்கள், சட்டசபை இடைத்தேர்தல்களும் கூட அண்மையில் நடத்தப்பட்டன. மேலும் சில மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல்களும் கூட ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த அனுபவங்களின் அடிப்படையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் முடிவடைகிறது. உத்தரப்பிரதேச மாநில சட்டசபையின் பதவி காலம் மே இறுதியில் முடிவடைகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 14.66 கோடி வாக்காளர்கள் உள்ளனர்; பஞ்சாப் மாநிலத்தில் 2 கோடி வாக்காளர்களும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 78.15 லட்சம் வாக்காலர்களும் உள்ளனர். மணிப்பூரில் 19.58 லட்சம் வாக்காளர்கள்; கோவாவில் 11.45 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 17.84 கோடி வாக்காளர்கள் இந்த 5 மாநில தேர்தல்களில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
இந்த 5 மாநில சட்டசபைகளின் பதவி காலங்கள் முடிவடையும்போது தேர்தல்களை நடத்திய புதிய எம்.எல்.ஏக்களுக்கான வெற்றி சான்றிதழ்களை தேர்தல் ஆணையம் வழங்கும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா தெரிவித்தார். அண்மையில் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 80,000 வாக்கு சாவடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. பீகாரில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதி செய்து கொடுக்கப்பட்டது. கொரோனவால் பாதிக்கப்பட்டோர் வாக்குச் சீட்டை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் 1,000 முதல் 1,500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.