இன்னும் விசாரணை முடியல.. நேரில் வாங்க.. சோனியா காந்தியை விடாத அமலாக்கப்பிரிவு.. மீண்டும் சம்மன்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் நேற்று 3 மணிநேரம் விசாரணை நடந்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராகக்கோரி அவருக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் வழங்கி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு பங்கு விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கப்பிரவு சம்மன் அனுப்பியது.

சோனியாவிடம் 3 மணிநேரம் விசாரணை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியா காந்திக்கு கடந்த மாதம் விசாரணையில் இருந்து ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கிடையே ஜூலை 21ல் விசாரணைக்கு ஆஜராகக்கோரி கடந்த வாரம் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று சோனியா காந்தி அமலாக்கப்பிரிவு முன்பு ஆஜரானார். சோனியா காந்தியிடம் வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவினர் பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதுதொடர்பான விசாரணை 3 மணிநேரம் நடந்தது. அதன்பிறகு நேற்றைய விசாரணை முடித்து கொள்ளப்பட்டது. இதையடுத்து சோனியா காந்தி அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றார்.

சோனியா காந்திக்கு சம்மன்
இந்நிலையில் தான் சோனியா காந்திக்கு புதிதாக சம்மன் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஜூலை 25ல் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜராக உள்ளார். முன்னதாக இந்த வழக்கில் கடந்த மாதம் ராகுல்காந்தியிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல் சோனியா காந்தியிடமும் அமலாக்கப்பிரிவு இன்னும் சில நாட்கள் விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் போராட்டம்
முன்னதாக சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அதோடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், அஜய் மக்கான் உள்பட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாகனங்களுக்கு தீவைப்பு
மேலும் மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், பீகார், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். கர்நாடக தலைநகர் பெங்களூரில் அமலாக்கப்பிரிவு அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் காருக்கு தீவைக்கப்பட்டது. அதேபோல் ஐதராபாத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்து தங்களின் எதிர்ப்பை காட்டினர்.












Click it and Unblock the Notifications