சோனியாவிடம் அமலாக்கதுறை விசாரிக்க எதிர்ப்பு.. பெங்களூர் காங்., ஆர்ப்பாட்டத்தில் காருக்கு தீவைப்பு
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் இன்று அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். பெங்களூரில் நடந்த போராட்டத்தில் காருக்கு தீவைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நேஷனல் ஹெரால்டு பங்குகளை சட்டவிரோத பணப்பரிமாற்றம் முறையில் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது புகார் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சேனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கப்பிரவு சம்மன் அனுப்பியது.

விசாரணைக்கு ஆஜரான சோனியா
இதற்கிடையே தான் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் ஜூன் மாத விசாரணையில் அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகும் கூட சோனியா காந்தி கேட்டு கொண்டதற்கு இணங்க அவருக்கு சிலகாலம் அமலாக்கப்பிரிவு விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கிடையே தான் கடந்த வாரம் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் ஜூலை 21ல் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று சோனியா காந்தி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜரானாார்.

காங்கிரஸ் போராட்டம்
இந்நிலையில் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், அஜய் மக்கான் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாடு முழுவதும் போராட்டம்
இதேபோல் மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், பீகார், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். இதில் பல இடங்களில் நடந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர். அசாமில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு நடந்தது.

பெங்களூரிலும் ஆர்ப்பாட்டம்
இதேபோல் கர்நாடக தலைநகர் பெங்களூரிலும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அங்குள்ள அமலாக்கபிரிவு அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராகவும், அமலாக்கப்பிரிவினருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காருக்கு தீவைப்பு
இதற்கிடையே அமலாக்கப்பிரிவு அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டு இருந்த காருக்கு தீவைக்கப்பட்டது. இதனால் அந்த கார் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பையும் ஏற்படுத்தியது.

2 வாகனங்கள் எரிப்பு
இதேபோல், சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமலாக்கப்பிரிவு அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் 2 மோட்டார்சைக்கிளை தீவைத்து எரித்து எதிர்ப்பை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகுல் விசாரணையிலும் போராட்டம்
முன்னதாக ராகுல்காந்தியிடம் ஜூன் மாதம் 5 நாட்கள் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தினர். மொத்தம் 50 மணிநேரத்துக்கும் அதிகமாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போதும் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த வேளையில் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்துக்குள் போலீசார் நுழைந்து தாக்கியதாகவும், எம்பிக்களிடம் போலீசார் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததும், இதுதொடர்பாக நாடாளுமன்ற இருஅவை தலைவர்களிடமும் காங்கிரஸ் எம்பிக்கள் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications