வதேரா அலுவலகங்களில் அமலாக்கப் பிரிவு ரெய்டு.. பாஜகவுக்கு தோல்வி பயம்.. காங். பாய்ச்சல்
டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், ப்ரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிலங்களை வாங்கியது தொடர்பாக, ராபர்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில் நடைபெற்ற பணமுறைகேடு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
ஆனால், ராபர்ட் வதேரா விசாணைக்கு ஆஜராகாத நிலையில், அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை அதிரடி நடத்தியது. டெல்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர், நொய்டா ஆகிய இடங்களில் வதேராவின் அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றது.
அதை உறுதிப்படுத்திய அவரது வழக்கறிஞர் சுமன், சோதனை மேற்கொள்வதற்கான உத்தரவு ஆவணத்தை காண்பிக்காமல் உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு உள்ளிருப்பவர்களை சிறை வைத்திருப்பதாக அமலாக்கத்துறை மீது குற்றம்சாட்டினார்.
மேலும், நான்கரை ஆண்டுகளாக கிடைக்காத ஆதாரத்தை அதிகாரிகளே உருவாக்குவதாகக் கூறிய அவர், இதுதான் சட்ட நடைமுறையா? என்றும் சாடினார். தங்களை வெளியே அனுப்பி விட்டு, ஏதோ ஒன்றை உள்ளே வைத்து விட்டு அமலாக்கத்துறையினர் தேடுதல்வேட்டை நடத்துவதாகவும் வதேரா வழக்கறிஞர் சுமன் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, ராபர்ட் வதேரா தொடர்புடைய நிறுவனம் பயனடைய முடியாததாலேயே, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே, ராணுவத் தளவாடங்களை வழங்குபவர்களிடமிருந்து, சோதனை நடத்தப்பட்டு வரும் இடங்களைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்குக்கு பணம் வந்திருப்பது தொடர்பான ஆவணங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.