தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா... ராஜினாமா... ஆசியன் வங்கி துணைத் தலைவராகிறார்!!
டெல்லி: தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா ராஜினாமா செய்துள்ளார். பிலிப்பைன்சில் இருக்கும் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அடுத்த மாதம் பொறுப்பேற்கவுள்ளார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திடம் சமர்பித்துள்ளார். ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு அசோக் லாவசா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், இவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது இன்னும் தெரிய வரவில்லை. இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஜனாதிபதியின் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவரது நியமனம் குறித்து ஜூலை 15ஆம் தேதி ஆசியன் வளர்ச்சி வங்கி வெளியிட்டு இருந்த தகவலில், '' அசோக் லாவசாவுக்கு தனியார்-பொது நிறுவன கூட்டு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளில் நல்ல அனுபவம் உள்ளது'' என்று தெரிவித்து இருந்தது.
தற்போது இந்த வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பில் திவாகர் குப்தா இருக்கிறார். தனியார் வங்கி மற்றும் தனியார், பொது வங்கி செயல்பாடுகள் குறித்த பணிகளில் ஈடுபட்டு இருந்தார். இந்த வங்கியில் துணைத் தலைவர்களாக ஆறு பேர் இருப்பார்கள். ஒவ்வொருவரின் பதவிக் காலமும் மூன்று ஆண்டுகளாகும். மேலும் இந்தப் பதவியை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
இன்றும் அசோக் லாவசாவுக்கு இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் இருக்கிறது. தொடர்ந்து இந்த பதவியில் நீடித்து இருந்தால், 2022 அக்டோபர் மாதம் இவர் ஓய்வு பெறும்போது, தலைமை தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெறலாம். ஆனால், அதற்குள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
2019ஆம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவர் மீதும் தேர்தல் நன்னடத்தை மீறல் தொடர்பாக வந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டார். இதனால் சர்ச்சைக்குள்ளானார். தேர்தல் முடிந்த பின்னர் இவரது குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இவரது மனைவி, மகன், சகோதரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இவர்கள் தங்களது மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் - பாஜக முறைகேட்டு புகார்.. மார்க் ஜுக்கர்பெர்க் உடனே விசாரிக்க வேண்டும்.. காங்கிரஸ் கடிதம்!
2018, ஜனவரி 23 ஆம் தேதி தேர்தல் கமிஷனராக லவாசா பொறுப்பேற்று இருந்தார். அரியானா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிதித்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2001-02 ஆம் ஆண்டுகளில் பொருளாதார விவகாரத்துறையில் இணை செயலாளராக ஆசியன் டிவலப்மென்ட் வங்கிக்கு பணியாற்றியுள்ளார்.