வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்- எதிர்ப்புக்கு இடையே தேர்தல் சீருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்!
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் மிக கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வகை செய்கிறது இந்த தேர்தல் சீர்திருத்த மசோதா.
தலைமை தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்தல் சீர் திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.

லோக்சபாவில் கடும் எதிர்ப்பு
இதனைத் தொடர்ந்து இன்று லோக்சபாவில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ இம்மசோதாவை தாக்கல் செய்தார். ஆனால் இந்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் மிக கடுமையாக எதிர்த்தனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது அதாவது வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் எண்ணையும் இணைக்க இந்த மசோதா வகை செய்கிறது. ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. அதனால் லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர்.

ஆதார் சட்டம் சொல்வது என்ன?
லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க ஆதார் சட்டம் அனுமதிக்கவில்லை. ஆகையால் மத்திய அரசு இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதேபோல் ஓவைசி, சசிதரூர் உள்ளிட்ட எம்.பிக்களும் இம்மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்தனர். சசி தரூர் பேசுகையில், ஆதார் எண் என்பது இருப்பிடத்துக்கான ஆதாரம்; அது குடியுரிமை ஆவணம் அல்ல. இந்த மசோதா இந்திய குடியுரிமை இல்லாதவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையைத் தரக் கூடியது என்றார்.

லோக்சபாவில் நிறைவேற்றம்
இதனால் லோக்சபாவில் அமளி நிலவியது. இதையடுத்து லோக்சபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் சபை கூடிய போது, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications