ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை.. வாரம் 3 நாட்கள் லீவு.. நிலுவையிலுள்ள சட்டம் அமலாகுமா?
டெல்லி: தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் வார விடுமுறை அளிப்பது, தொழிலாளர் அடிப்படை ஊதிய உயர்வு போன்றவற்றை உள்ளடக்கிய புதிய விதிமுறைகள் அக்டோபர் 1ம் தேதி முதல் நாடு முழுக்க அமலுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிகளை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.
இதற்கான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேறியது. இது கலவையான விமர்சனங்களை பெற்றது.
2வது குழந்தை அப்படியே அப்பனை உருச்சிவச்சிருக்குனு சொன்னதால் தாக்கிய செஞ்சி பெண்.. கள்ளக்காதலன் பகீர்
பல கேள்விகள்
ஏனென்றால், ஊதிய சட்டம், குறைந்தபட்ச ஊதிய சட்டம், ஊக்கத்தொகை சட்டம், சமமான ஊதிய சட்டம் ஆகிய இந்த 4 வகை சட்டங்கள் தொழிலாளர்களுக்கு நல்லது செய்கிறதா அல்லது தொழிலதிபர்களுக்கு நல்லது செய்கிறதா, அல்லது அரசுக்கு வருமானத்தை அதிகரிக்கிறதா என பல கேள்விகளை எழுப்பின.
அலோவன்ஸ் 50 சதவீதம்தான்
இந்த சட்டத்தின்படி, தொழிலாளர்களுக்கான படிகள் என்பது 50 சதவீதத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளம் என்பது 50 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்தப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்துக் காட்டி இதர படிகள் அதிகமாக கொடுப்பதாக காட்டுவது வழக்கம். இதன் மூலம் தொழிலாளிகளுக்கு கூடுதலாக வரி விலக்கு கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அடிப்படை சம்பளத்தை 50 சதவீதம் உயர்த்த இந்த சட்டம் வகை செய்வதால், நிறுவன உரிமையாளர்களுக்கான செலவு அதிகரிப்பதுடன், தொழிலாளர்கள் மாதந்தோறும் பெறும் நிகர ஊதியம் குறையும்.
ஊழியர்களுக்கு மாதம் கைக்கு வரும் ஊதியம்
சமூக பாதுகாப்பு என்ற முறையில் அடிப்படை ஊதியத்தில் தலா 12 சதவீதத்தை தொழிலாளர்களும், உரிமையாளர்களும் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடைக்கு வழங்க வேண்டும். சமூக பாதுகாப்பு அம்சங்களுக்கான பங்களிப்பு அதிகரிப்பதால், தொழிலாளர்களுக்கு 4 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மாதந்தோறும் பெறப்படும் ஊதியம் குறையும் வாய்ப்பு உள்ளது. தொழிலாளர்களுக்கு வருங்கால சேமிப்பாக இது பயன்படுகிறது என்றாலும், இப்போதுள்ள பணப் பற்றாக்குறையில், மக்கள் கையில் பணம் இருப்பதுதான் நல்லது. அதுதான் பல தொழில்களும் செழித்து வளர உதவும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நிறுவன உரிமையாளர்கள் தங்களது தொழிலாளர்களின் ஊதியப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டிவரும் என்பதால், இது ஒரு தலைவலிதான் என்று பல தொழிலதிபர்கள் தெரிவிக்கிறார்கள்.
12 மணி நேரம் பணி
இந்த சட்டங்களின் மற்றொரு முக்கிய அம்சம், நாள் ஒன்றுக்கு 9 மணி நேர பணி, 12 மணி நேரமாக உயர்த்தப்படும் என்பதுதான். தினமும், 12 மணி நேரம் பணி செய்பவர்கள், வாரத்திற்கு 3 நாட்கள் வீக்-ஆப் எடுத்துக் கொள்ளலாம். நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதுமாம்.
அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்
இந்த புதிய விதிகளை, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது தள்ளிப் போனது. இந்நிலையில், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் இந்த விதிமுறைகள் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொழில் துறை உறவுகளுக்கான புதிய விதிகளின்படி, 300 ஊழியர்கள் வரை உள்ள நிறுவனங்கள், செலவீனங்களை குறைப்பது, ஆட் குறைப்பு, நிறுவனத்தை மூடுவது போன்ற நடவடிக்கைகளுக்கு, அரசின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொழிலதிபர்களுக்கு சாதகமான அம்சமாகும் நஷ்டம் ஏற்பட்டால் உடனே நிறுவனத்தை மூடிவிட்டு கிளம்பி விட அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் துறைசார்ந்த வணிக நிபுணர்கள்.
இருப்பினும் இந்த 4 சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிமுறைகள் சட்ட வடிவில்தான் இருக்கிறதே தவிர, ஒருமித்த ஆதரவு கிடைக்காததால், இன்னமும் அரசு அதை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த சட்டங்களை அமல்படுத்தலாமா என்று மத்திய தொழிலாளர் நலத்துறை பரிசீலித்து வருவதாக அந்த ஆங்கில நாளிதழ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.