கொரோனா 2ஆம் அலைக்கு பிறகும்.. கெத்து குறையாத யோகி ஆதித்யநாத்.. 42% உபி மக்கள் ஆதரவு..சிவோட்டர் சர்வே
டெல்லி: கொரோனா 2ஆம் அலையை உபி யோகி அரசு மோசமாகக் கையாண்டதாகப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையிலும்கூட, அடுத்த தேர்தலில் முதல்வர் பதவிக்கு யோகி ஆதித்யநாத் சிறந்தவராக இருப்பார் என அம்மாநில மக்கள் 42.2% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. அப்போது தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது.
அதேபோல தினசரி உயிரிழப்புகளும் நான்காயிரம்வரை கூட சென்றது. இப்போது தான் நிலைமை மெல்லக் கட்டுக்குள் வருகிறது

உபி கொரோனா
கொரோனா 2ஆம் அலை மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று உத்தரப் பிரதேசம். இரண்டாம் அலை உச்சத்திலிருந்த சமயத்தில் உபி மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. முறையான சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழந்ததாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. கொரோனா சடலங்கள் கங்கை நதியில் மிதந்து சென்ற அவலங்களை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள்.

உத்தரப் பிரதேச தேர்தல்
நிலைமை இப்படியிருக்க உத்தரப் பிரதேசம் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்கிறது. உபி தேர்தலை பாஜக தலைமை மிக முக்கியமாகக் கருதுகிறது. 2024 மக்களவை தேர்தலின் முன்னோட்டமாகவே உபி சட்டசபைத் தேர்தலை பாஜக தலைமை பார்க்கிறது. இதனால் தான் பிரதமர் மோடியின் தளபதியாகக் கருதப்படும் ஏகே சர்மா களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உபி தேர்தல் குறித்து டைமஸ் நவ்- சிவோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

யோகிக்கு தொடரும் ஆதரவு
அதில் யோகி ஆதித்யநாத் தான் சிறந்த முதல்வர் வேட்பாளர் என 42.2% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவருக்கு அடுத்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக 32.2% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 17% மக்கள் பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி சிறந்த முதல்வர் வேட்பாளராக இருப்பார் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் வெறும் 2.9% மக்கள் மட்டுமே காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி சிறந்த முதல்வர் வேட்பாளர் எனத் தெரிவித்துள்ளனர்.

நேர் மாறான முடிவு
கொரோனா 2ஆம் அலையை உத்தரப் பிரதேச அரசு கையாண்ட விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. உபி மக்கள் யோகி அரசு மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள டைம்ஸ் நவ் - சிவோட்டர் கருத்துக்கணிப்பு அதற்கு நேர் மாறாக உள்ளது. உபி மக்கள் மத்தியில் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்றே இது காட்டுகிறது.

பிரதமர் மோடி
அதேபோல பிரதமர் மோடியின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்ற கேள்வி இதில் கேட்கப்பட்டிருந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக இருந்ததாக 44.7 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 19.7 சதவீதம் பேர் அவரது செயல்பாடு சராசரியாக இருந்தது என்றும் 35.6 சதவீதம் பேர் மோசமாக இருந்தது என்றும் கூறியுள்ளனர்.

அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு உபி மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது என்றாலும்கூட அவருக்கும் யோகிக்கும் இடையே சுமார் 10% வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் வரை இருப்பதால், அதற்குள் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் நிலைமை மாறலாம் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications