டெல்லியில் 40 நாட்களாக போராடும் விவசாயிகள்... கடும் குளிர், மழைக்கு 60 பேர் மரணம்
ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் ஒரு விவாசாயி மரணம் அடைவதாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் இதுவரை 60 பேர் உயிரிழந்திருப்பதாக பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் ஒரு விவாசாயி மரணம் அடைவதாக விவசாயிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்வர் 26ஆம் தேதி டெல்லியை நோக்கி படையெடுத்தனர். காவல்துறையினரின் தடைகளை மீறி முன்னேறிச் சென்ற விவசாயிகள், டெல்லியின் புராரி மைதானத்தில் முகாமிட்டனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிடில் ஒரு வருடம் ஆனாலும் இந்த போராட்டம் ஓயாது என்று திட்டவட்டமாக தெரிவித்த விவசாயிகள், தொடர்ந்து 40ஆவது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடும் குளிர் பனி மூட்டம் நிலவி வருகிறது. சாலைகளில் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு ட்ராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கிக் கொண்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்.
உடும்பஞ்சோலை- பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என்ற அரசாணையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்-சீமான்
விவசாயிகள் பேச்சுவார்த்தை
விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. இது வரை நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. 7ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தால் இனி பேச்சுவார்த்தையே கிடையாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போராடும் விவசாயிகளுக்கு, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள், மற்றும் பிற அமைப்புகள் சார்பில் உணவு, படுக்கை, கூடாரம் உள்ளிட்ட, பலதரப்பட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் போரட்டத்திற்கு ஆதரவும் அதிகரித்து வருகின்றது.
டெல்லியில் ட்ராக்டர் பேரணி
இதனிடையே விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. அதை ஏற்க மறுத்த விவசாயிகள் வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று கூறி போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளனர். ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் மிகப்பெரிய ட்ராக்டர் பேரணி நடத்தப்போவதாகவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
விவசாயிகள் தஞ்சம்
டெல்லியில் சமீப நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவுகின்றது. இதனை பொருட்படுத்தாமல் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது மழை பெய்யத் தொடங்கி உள்ளது. டெல்லி மற்றும் நொய்டா எல்லைகளை இணைக்கும் சில்லா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மழைப்பொழிவில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள அதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
எது வந்தாலும் எதிர்கொள்வோம்
பனி, மழை என எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை எதிர் கொண்டு தங்களை தற்காத்துக் கொள்வோம் என்றும் மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் மரணம்
இந்த நிலையில், டெல்லி போராட்டத்தில் ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி உயிரிழப்பதாக பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிலவும் கடும் குளிராலும் மாரடைப்பாலும் இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாகவும் கோரிக்கையை பரிசீலனை செய்யவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.