ட்விஸ்ட்! உபி தேர்தலுக்கு முன் மீண்டும் தொடங்கும் போராட்டம்? செக் வைத்த விவசாயிகள்- யாருக்கு சிக்கல்
டெல்லி: உத்தரப் பிரதேச தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு மீண்டும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்,
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 2019 இறுதியில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள், சுமார் ஓராண்டிற்கும் மேலாகத் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டங்கள் தொடர்ந்த போதிலும் முதலில் மத்திய அரசு சட்டங்களைத் திரும்பப் பெற மறுத்தே வந்தது. இந்தச் சூழலில் கடந்த நவ. மாதம் நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
உ.பி.: சமூக நீதியை நிலைநாட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவோம்- அகிலேஷ் யாதவ் உறுதி
கோரிக்கை
இது தொடர்பாகத் தீர்மானமும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நிறைவேற்றப்பட்டது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு தேர்தல் களத்திலும் எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளின் மற்றொரு முக்கிய கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாகவும் மத்திய அரசு உத்தரவாதம் அளித்திருந்தது.
ட்விஸ்ட்
இருப்பினும், இதுவரை குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் உபி-இல் முதற்கட்ட தேர்தல் பிப். 10ஆம் தேதி நடைபெறும் நிலையில், இதற்கு சில நாட்கள் முன்பு (ஜன. 31) போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது உ.பி மற்றும் பஞ்சாப் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம்
சிங்கு எல்லையில் செய்தியாளரிடம் பேசிய விவசாயச் சங்கத் தலைவர்களில் ஒருவரான யுத்வீர் சிங், "இதுவரை, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஒரு குழுவை அமைக்கவில்லை. அதேபோல லக்கிம்பூர் கெரி விவகாரத்தில் தொடர்புடைய மத்திய இணை அமைச்சரை நீக்கவில்லை. மத்திய அரசு எங்கள் கோரிக்கைக்குப் பதில் அளிக்கவில்லை என்றால் வரும் ஜனவரி 31இல் ‘விரோத் திவாஸ்' போராட்டம் நடத்தப்படும்.
ஒத்திதான் வைத்துள்ளோம்
கடந்த டிசம்பர் 11ஆம் தேதி நாங்கள் போராட்டத்தை ஒத்திவைப்பதாகத் தான் அறிவித்தோம். எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு பதிலளிக்கவில்லை என்றால் ஜனவரி 31இல் நாடு முழுவதும் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்துவோம். அதன் பின் பிப்ரவரி 1 முதல் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் எங்கள் போராட்டத்தைத் தொடங்குவோம்" என்றார்.
புதிர் போடும் ராகேஷ் டிக்கைட்
இது தொடர்பாக விவசாயச் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகேஷ் டிக்கைட் கூறுகையில், "நாங்கள் ஜனவரி 21 உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரிக்கு செல்லவுள்ளோம். அங்குப் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திப்போம். எங்கள் போராட்டத்தின் அடுத்த நடவடிக்கை விரைவில் ஆலோசித்து முக்கிய முடிவை எடுப்போம்" என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
Recommended Video
ஏன் முக்கியம்
உத்தரப் பிரதேசத்தில் ஏற்கனவே பாஜகவில் இருந்து சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் விலகி வருகின்றனர். இந்தச் சூழலில் விவசாயிகளின் போராட்டம் குறித்த இந்த அறிவிப்பு புது தலைவலியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதிலும் உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப். 10இல் முதற்கட்ட தேர்தல் தொடங்கும் நிலையில், இதற்கு சில நாட்கள் முன்பு மீண்டும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளது அரசியல் ரீதியாக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.