டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகளின் அனல் கிளப்பும் போராட்டம் - இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்
வேளாண் சட்டசங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
டெல்லி: நடுங்கவைக்கும் கடும் குளிர் வட இந்தியாவை வாட்டி வதைக்க, அதை பொருட்படுத்தாமல் டிராக்டர்களை வீடுகளாக்கிக் கொண்டு டெல்லியில் முகாமிட்டு போராடி வருகின்றனர் விவசாயிகள். கடந்த 26 நாட்களாக போராடி வரும் விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது வேளாண் சட்டங்களான அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல நாட்கள் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. ரயில் மறியலை கைவிட்டு, டெல்லியை நோக்கி 'டெல்லி சலோ' என்ற போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மன்கிபாத் மோடி உரையின் போது பாத்திரங்களில் ஒலி எழுப்புகள்- புதிய போராட்டங்களை அறிவித்த விவசாயிகள்!
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து டிராக்டர், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கிளம்பிய விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளிலும் முகாமிட்டுள்ளனர். விவசாயிகளின் உற்ற தோழனாக திகழும் டிராக்டர்களை வீடுகளாக்கி அதிலேயே சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்துக்கொண்டு கடந்த 26 நாட்களாக போராடி வருகின்றனர்.
போராடும் விவசாயிகள் பலர் முதியவர்களாக இருப்பதால் குளிர் தாங்காமல் உயிரிழந்து வருகின்றனர். எனினும் அரசுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்பது விவசாயிகளின் முடிவாகும்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடந்து வரும் அனைத்து இடங்களிலும் விவசாயிகள் இன்று ஒருநாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
சுவராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் செய்தியாளர்களிடம் பேசும் போது, டெல்லி போராட்ட களத்தில் 11 பேர் கொண்ட குழு, இந்த உண்ணாவிரதத்தை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோல், ஹரியானா மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை 25ஆம் தேதியில் இருந்து 27ஆம் தேதிவரை விவசாயிகள் தடுத்து நிறுத்துவார்கள் என்று விவசாய தலைவர் ஜெகஜீத்சிங் டாலிவாலா தெரிவித்தார்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே பல கட்டங்களாக மத்திய அமைச்சர்களும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.