கேரள கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் திடுக்.. பிஷப்புக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்
Recommended Video

டெல்லி: பலாத்கார வழக்கில் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட் கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தேவாலயத்திற்கு உட்பட்ட பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ முல்லக்கல் பலாத்காரம் செய்துவிட்டதாக பரபரப்பு புகார் கூறினார்.
இந்த புகாரை பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். இருப்பினும் முலக்கல்லிடம் கேரள தனிப்படை போலீசார் விசாணை நடத்தினார்கள். பல நாட்கள் தொடர்ந்த விசாரணையின் முடிவில் அவரை போலீசார் கைது செய்தனர்.

நிபந்தனை ஜாமீன்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிராங்கோ முல்லக்கல் கோட்டயத்தில் உள்ள பாலா ஜெயிலில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இதன்பிறகு கேரள ஹைகோர்ட்டில் தனக்கு ஜாமீன் வழங்க கேட்டு பிராங்கோ முல்லக்கல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், பிராங்கோ முல்லக்கல்லுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.

அச்சுறுத்தல் ஆரம்பம்
பிராங்கோ முல்லக்கல் கேரளாவுக்குள் நுழையக் கூடாது, அவர் தனது பாஸ்போர்ட்டை ஹைகோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும், சாட்சியங்களை கலைக்கக் கூடாது, 2 வாரத்திற்கு ஒரு முறை விசாரணை அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராக வேண்டும் என்று கேரள ஹைகோர்ட்டு நிபந்தனை விதித்திருந்தது. ஆனால் வெளியே சென்ற பிராங்கோ முலக்கல் சாட்சிகளுக்கு அச்சுறுத்தலை ஆரம்பித்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

பாதிரியார் குரியகோஸ்
ஜலந்தர் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட தேவாலயத்தில் பாதிரியார் குரியகோஸ் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் கூறியிருந்தார். இதற்கு ஏற்ப குரியகோஸ் கார் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தினர் சில மர்ம நபர்கள்.

மர்ம சாவு
இந்த நிலையில் குரியகோஸ் மர்மமான முறையில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 60 வயதாகும் குரியகோஸ் இன்று காலை ஜலந்தரில் உள்ள போக்பூர் என்ற பகுதியில் உள்ள தனது அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது குடும்பத்தார் அளித்த பேட்டியில், இந்த சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பிஷப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த காரணத்தினால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று குரியகோசின் சகோதரர் மலையாள டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குற்றம்சாட்டினார்.

முன்பே சொன்ன பாதிரியார்
சமீபத்தில், மாத்ருபூமி ஊடகத்திற்கு, குரியகோஸ், அளித்த பேட்டியின் போது, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி என்னை அணுகி உதவி கேட்டார். இருப்பினும் முதலில் காவல்துறைக்கு செல்வதற்கு நாங்கள் பயப்பட்டோம். எங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று அஞ்சினோம். இப்போது நான் பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த பிறகு தேவாலய அதிகாரிகளிடமிருந்து எனக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்துள்ளன என்று தெரிவித்திருந்தார். எனவே குரியகோஸ் மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications