"ஐந்தே நொடிகள்.. 2 துப்பாக்கி குண்டுகள்" சுருண்டு விழுந்த முன்னாள் ஜப்பான் பிரதமர்.. மறக்க முடியுமா
டெல்லி: இந்தாண்டு இறுதியில் நாம் உள்ள போதிலும், இந்தாண்டு நாம் பல முக்கிய ஆளுமைகளை இழந்துள்ளோம்.
2022ஆம் ஆண்டு ஏதோ இப்போது தான் ஆரம்பித்தது போல இருக்கிறது. ஆனால், பாருங்கள் அதற்குள் டிசம்பர் வந்துவிட்டது. இன்னும் சில வாரங்களில் நாமே 2023ஆம் ஆண்டையே வரவேற்கக் காத்திருக்கிறோம்.
கடந்த 11 மாதங்களாகச் சர்வதேச அளவில் பல முக்கிய நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழத் தொடங்கியது. அதேநேரம் இந்தாண்டு நாம் பல முக்கிய நபர்களை இழந்துள்ளோம்.
மனித கறியை கீறி.. மசாலா தடவி.. குக்கரில் சமைத்து சாப்பிட்ட சம்பவம்.. கேரள நரபலியை மறக்க முடியுமா?
ஜப்பான்
அப்படி இந்தாண்டு நாம் இழந்த மிக முக்கியமான ஒரு அரசியல் ஆளுமை ஷின்சோ அபே. கடந்த 2012 முதல் ஜப்பான் பிரதமராக இருந்த இவர் 2020இல் தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். ஜப்பான் நாட்டில் அதிக காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ஷின்சோ அபே. நவீன ஜப்பானை வடிவமைத்ததில் இவரது பங்கு ரொம்பவே முக்கியம். இந்தியா உட்படப் பல சர்வதேச நாடுகளுடன் ஜப்பானுக்கு நெருக்கம் ஏற்பட்டது ஷின்சோ அபே காலத்தில் தான். இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட ஷின்சோ அபேயை இந்தாண்டு நாம் இழந்தோம்.
படுகொலை
அரசியல் தலைவர்களை பொது இடத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யும் மோசமான சம்பவங்கள் வரலாற்றில் ஆங்காங்கே நடந்தே உள்ளன. முன்னாள் அமெரிக்க அதிபர்கள் லிங்கன், ஜான் எஃப் கென்னடி, நம் நாட்டில் மகாத்மா காந்தி என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். அப்படியொரு படுகொலை சம்பவத்தில் தான் நாம் ஷின்சோ அபேயை இழந்துள்ளோம். இந்தாண்டில் நடந்த மிக மோசமான படுகொலை சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
என்ன நடந்தது
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள நாராவில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அபே பிரதமர் பதவியை ராஜினாமா செய்த போதிலும், தொடர்ச்சியாகக் கட்சி சார்ந்த பிரசார கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். அங்கு கடந்த ஜூலை மாதம் தேர்தல் ஒன்று நடக்க இருந்த நிலையில், நாரா ரயில் நிலையம் அருகே தனது கட்சிக்கு வாக்கு சேகரித்து மக்களிடையே பேசிக் கொண்டு இருந்தார். திடீரென அவர் சுருண்டு விழுந்தார். முதலில் அங்கு என்ன நடந்தது என யாருக்கும் புரியவில்லை. திடீரென அவரது நெஞ்சு பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவர் உடனடியாக ஹெலிகாப்பட்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு
மர்ம நபர் ஒருவர் பின்னால் இருந்தபடி அபேவை இரு முறை சுட்டுள்ளார். சம்பவம் நடந்து சில நிமிடங்களில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சுமார் 5 மணி நேரம் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அவரை காப்பாற்ற முடியவில்லை. ஜூலை 8ஆம் தேதி அபே உயிரிழந்தார். இரு குண்டுகள் அவரது உடலுக்குத் துளைத்துச் சென்றுள்ளது. அதில் ஒரு துப்பாக்கிக் குண்டு அவரது இதயத்தில் துளையை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு குண்டு அந்த காயத்தை மோசமாக்கிய நிலையில், ரத்த இழப்பும் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக அவர் மரணமடைந்தார்.
என்ன காரணம்
இது தொடர்பாக 41 வயதான டெட்சுயா யமகாமி என்பவர் கைது செய்யப்பட்டார். ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் வீரரான இவர், அபேவை கொல்ல திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்ப முயன்ற யமகாமியை அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். ஷின் சோ அபே பிரதமராக இருந்த சமயத்தில், அவரது நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவரை கொலை செய்யத் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
துப்பாக்கி
அமெரிக்காவில் துப்பாக்கிகள் எளிதாகக் கிடைக்கும். ஆனால், ஜப்பானில் அப்படியில்லை. துப்பாக்கியை வாங்க பல்வேறு நடைமுறைகள் உள்ளன. ஜப்பான் போலத் துப்பாக்கிச் சட்டங்கள் மிகவும் கடுமையாக உள்ள நாட்டில் பொது இடத்தில் வைத்து தலைவர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடற்படையில் பணியாற்றிய அனுபவத்தை வைத்துக் கொண்டு அவர் வீட்டிலேயே துப்பாக்கியை வடிவமைத்து உள்ளார்.
வீடியோ
அதேபோல அபேவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்தும் அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள் குறித்தும் பல கேள்விகளை எழுப்பினர். துப்பாக்கிச் சூடு வீடியோவிஸ், முதல் துப்பாக்கிக் குண்டு மிஸ் ஆனது. இரண்டாவதாக அவர் சூடும் வரை போதுமான இடைவெளி இருந்தது. ஷின்சோ அபேவை இதைப் பயன்படுத்திக் காப்பாற்றி இருக்கலாம் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முறையாகச் செயல்படாததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.