முத்தத்துக்கு இப்படியா? அப்போ மணிப்பூர் பெண்கள் நிலைமை! பாஜக பெண் எம்பிக்களை சீண்டிய பெண் ஐஏஎஸ்
டெல்லி: லோக்சபாவில் ராகுல் காந்தி ‛பிளேயிங் கிஸ்' கொடுத்ததால் பாஜக பெண் எம்பிக்கள் சபாநாயகரிடம் புகாரளித்துள்ள நிலையில், ‛‛மணிப்பூர் பெண்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்க'' என பாஜக பெண் எம்பிக்களை சீண்டும் வகையில் மத்திய பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்டின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பை குக்கி பழங்குடியினர் காட்டினர். கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த ஊர்வலம் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது.

இந்த வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. 3 மாதங்களை கடந்தும் வன்முறை நீடித்து வருகிறது. வன்முறையை கட்டுப்படுத்த மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடந்தது. இன்று 3வது நாளாக நடைபெற உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை வழங்க உள்ளார். முன்னதாக நேற்றைய விவாதத்தின்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். உரையின் முடிவில் எதிர்க்கட்சி தலைவர்களை பார்த்து ‛பிளேயிங் கிஸ்' கொடுத்து சென்றார்.
இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுலின் இந்த செயலுக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பெண்கள் உள்ள நாடாளுமன்ற சபையில் ராகுல் பிளேயிங் கிஸ் கொடுத்து கண்ணியமற்ற முறையில் நடந்துள்ளது. இது நாடாளுமன்றத்தில் இதுவரை நடக்காத ஒன்று. பெண் வெறுப்புணர்வு கொண்டவரால் தான் இப்படி செய்ய முடியும் என சாடினார். மேலும் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் அளிக்கப்பட்டது.
ज़रा सोचिए मणिपुर की महिलाओं को कैसा महसूस हुआ होगा? pic.twitter.com/lINeLtQyuT
— Shailbala Martin (@MartinShailbala) August 9, 2023
இந்நிலையில் தான் மணிப்பூர் விவகாரத்தை மூடிமறைக்க பாஜக ராகுல் காந்தியின் பிளேயிங் கிஸ் விவகாரத்தை பூதாகரமாக்கி திசைதிருப்ப முயற்சி செய்கிறது என தெரிவித்துள்ளது. தற்போது ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக மற்றொரு தரப்பினரும் கருத்துகளை பதிவிட்ட வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய பிரதேசத்தில் பணி செய்து வரும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட பதிவு கவனத்தை பெற்றுள்ளது.
இந்த பதிவை போட்ட ஐஏஎஸ் அதிகாரியின் பெயர் ஷைல்பாலா மார்டின். இவர் மத்திய பிரதேச மாநில தலைமை செயலகத்தில் பொது நிர்வாக பிரிவில் கூடுதல் செயலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி எம்பி மீது சபாநாயகரிடம் பெண் எம்பிக்கள் அளித்த புகார் கடிதத்தை பதிவிட்டுள்ளதோடு, ‛‛மணிப்பூர் பெண்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதை சற்று யோசித்து பாருங்கள்'' என இந்தியில் தெரிவித்துள்ளார்.
அதாவது ராகுல் காந்தியின் பிளேயிங் கிஸ்ஸால் புகார் அளித்த பாஜக பெண் எம்பிக்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மணிப்பூர் பெண்களை பற்றி யோசிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக பெண் ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்டின் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவரது பதிவு என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications