பணமோசடி வழக்கில்.. சிறையில் உள்ள மாஜி ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன்- டெல்லி கோர்ட்
டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி 2 ஆண்டுகள் திகார் சிறையில் இருந்த டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர் ஜெயினுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. வழக்கின் விசாரணையை இன்னும் அமலாக்க துறை தொடங்கக் கூட இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசின் அமைச்சர்களாக இருந்த பலர் கடந்தாண்டு கைதாகினர். குறிப்பாக டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா உள்ளிட்டோரும் மதுபான கொள்கை விவகாரத்தில் கைதாகினர்.

அதுபோல தான் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் கடந்த 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பண மோசடி புகாரில் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு இருந்தார்.
பணமோசடி புகார்: அதாவது கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின், கடந்த 2015 முதல் 2017 ஆண்டுகளில் பல்வேறு நபர்களின் பெயரில் அசையும் சொத்துக்கள் வாங்கியதாக முதலில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பிறகு பண மோசடி நடந்தாக புகார் எழுந்த நிலையில், அமலாக்கத் துறையும் கடந்த 2017ல் வழக்குப்பதிவு செய்தது. அதன் பிறகு அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
இந்தச் சூழலில் தான் கடந்த 2022ம் ஆண்டு பணமோசடி சட்டத்தில் அவரை அமலாக்க துறை கைது செய்தது. அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அமலாக்கத்துறையின் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் கோரி சத்யேந்தர் ஜெயின் டெல்லி ரேஸ் கோர்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜாமீன்: இந்த வழக்கை நீதிபதி விஷால் கோக்னே விசாரித்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீதான தனது தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இதற்கிடையே இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த டெல்லி நீதிமன்றம், சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விசாரணையில் தாமதம் மற்றும் நீண்ட காலமாகச் சிறையில் இருந்தது காரணமாக சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையை இன்னும் அமலாக்கத் துறை தொடங்கக் கூட இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி டெல்லி கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
என்ன காரணம்: டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவும் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தார். அவரும் நீண்ட காலம் சிறையில் இருந்த நிலையில், நீண்ட நாள் சிறைவாசத்தைக் காரணம் காட்டியே சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கி இருந்தது. சிறை என்படி விதிவிலக்கு தான் என்றும் ஜாமீன் என்பதே விதி என்றும் நீதிபதிகள் அப்போது கூறியிருந்தனர்.
சுப்ரீம் கோர்ட் அளித்த அந்த உத்தரவை மேற்கொள் காட்டியே டெல்லி ரேஸ் கோர்ஸ் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் இரண்டு ஆண்டுகள் அவருக்கு ஒரு வழியாக இப்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
சமீபத்தில் தான் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா என ஆம் ஆத்மி தலைவர்களுக்கு அடுத்தடுத்து ஜாமீன் கிடைத்து வரும் நிலையில், இப்போது சத்யேந்திர் ஜெயினுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது












Click it and Unblock the Notifications