அமைச்சர் பதவியிலிருந்தா தூக்குறீங்க.. அரசியலில் இருந்தே போறேன்.. பாஜக எம்பி பாபுல் சுப்ரியோ தடாலடி
டெல்லி: பிரதமர் மோடி அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி., பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதேநேரம், பாஜக தனது கட்சி என்றும் வேறு எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக கடந்த 8 மாதங்களாக பதவியில் இருந்தவர் பாபுல் சுப்ரியோ. ஆனால், சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக பேஸ்புக்கில் ஒரு நீண்ட பதிவை எழுதிய பாபுல், கடந்த சில நாட்கள் முன்பு அரசியலில் இருந்து விலகும் முடிவை பற்றி அமித் ஷா மற்றும் ஜேபி நட்டாவுக்கு அறிவித்ததாக கூறியுள்ளார்.

நன்றி தெரிவிக்கிறேன்
"என்னை பல வழிகளில் ஊக்கப்படுத்தியவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் ஏன் அரசியலை விட்டு விலகினேன் என்ற கேள்வி எழும்? அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்றால் ஆம். ஓரளவுக்கு தொடர்பு இருக்கிறது.

அமைதிக்காக ஓய்வு
2014 மற்றும் 2019 க்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இன்று மேற்கு வங்காளத்தில் பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. தேர்தலுக்கு முன்பு மாநில தலைமைக்கு சில பிரச்சினைகள் இருந்தன. அதில் தப்பில்லை. ஆனால் அவற்றில் சில பொது வெளிக்கு வருகின்றன. நான் அமைதியை விரும்புகிறேன். இவ்வாறு தனது பேஸ்புக் பதிவில் பாபுல் சுப்ரியோ தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம்
இதனிடையே இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. "அரசியலை விட்டு வெளியேறுவது பற்றி யாராவது பேசினால், அவர் முதலில் எம்.பி. பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லையென்றால், இது எல்லாம் நாடகம் என்றுதான் நான் கூறுவேன். அமைச்சர் பதவியை இழந்த பிறகு, பாபுல் சுப்ரியோவை பாஜக கண்டுகொள்ளவில்லை. எனவே டெல்லியின் கவனத்தை ஈர்க்க முயல்கிறார்" என்று திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறியுள்ளார்.

எம்.பி பதவி
அதேநேரம், விமர்சனம் வந்த பிறகு பாபுல் சுப்ரியோ தனது பேஸ்புக் பதிவை திருத்தம் செய்துள்ளார். அதில், நான் எனது எம்பி பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளேன் என்று தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications