விமானம் கடத்தப்பட்டது..பயணி போட்ட டிவிட்டால் பரபரத்த டெல்லி விமான நிலையம்..கடைசியில் நடந்த ட்விஸ்ட்
டெல்லி: துபாயில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் மோசமான வானிலை காரணமாக டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் தாமதம் ஆவதால் கடுப்பான பயணி செய்த செயல் ஒட்டுமொத்த விமான நிலையத்தையும் சிறிது நேரம் பரபரப்புக்கு உள்ளாக்கி விட்டுள்ளது.
விமான பயணத்தின் போது பயணிகள் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொள்ளும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
விமான பணிப்பெண்களிடம் ஆக்ரோஷமாக நடப்பது சக பயணிகளிடம் அத்துமீறி செயல்படுவது என அடிக்கடி விமானத்தில் நடைபெறும் சம்பவங்கள் தலைப்புச் செய்திகளாகி வருகின்றன.

எரிச்சல் அடைந்த பயணி
ஏர் இந்தியா விமானத்தில் கூட அண்மையில் வயதான பெண் பயணி மீது ஷங்கர் மிஸ்ரா என்பவர் மது போதையில் சிறு நீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளையும் விமான பயணிகள் மீது விமான நிறுவனங்கள் காட்டும் அக்கறை குறித்தும் பெரும் கேள்விகளை எழுப்பும் வகையில் இருந்தது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான பயணம் தாமதம் ஆனாதால் எரிச்சல் அடைந்த பயணி செய்த காரியம் விமானத்தை மேலும் தாமதம் ஆக்கியதோடு, கம்பி எண்ணும் நிலைக்கும் அவரை தள்ளி விட்டு இருக்கிறது. இது குறித்த விவரம் வருமாறு:-

டெல்லி விமான நிலையம்
தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமானம் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். உலக அளவில் பிஸியாக காணப்படும் விமான நிலையங்களில் ஒன்றான இந்த விமான நிலையத்தில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர். விமானங்களும் எப்போதும் டேக் ஆப் செய்வதும் தரையிறங்குவதும் என விமான நிலையம் மிகவும் பரபரப்பு நிறைந்ததாக காணப்படும். இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி துபாயில் இருந்து - ஜெய்பூருக்கு செல்லும் ஸ்பைஸ் ஜெட் எஸ்.ஜி 58 விமானத்தில் மோதி சிங் ரதோர் என்ற 29 வயது இளைஞர் பயணம் செய்துள்ளார்.

விமானம் கடத்தப்பட்டதாக ட்விட்
மோதி சிங் ரதோர் பயணித்த ஸ்பைஸ் ஜெட் விமானம் மோசமான வானிலை காரணமாக டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது. இதனால், விமானம் தாமதம் ஆனது. இந்திரா காந்தி விமான நிலையத்தில் காலை 9.45 மணிக்கு விமானம் தரையிறங்கியிருக்கிறது. விமானம் தாமதம் ஆனதால் விரக்தி அடைந்த மோதி சிங் ரதோர் தனது ட்விட் பதிவில் விமானம் கடத்தப்பட்டதாக போட்டுள்ளார். இதனால் விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை
விமானத்தை முழுவதுமாக சோதனையிட்ட அதிகாரிகள் அதன்பிறகே தொடர்ந்து விமானம் புறப்பட்டு செல்ல அனுமதி கொடுத்தனர். விமானம் கடத்தப்பட்டதாக ட்விட் போட்ட பயணியையும் பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லி காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ராஜஸ்தானை சேர்ந்த மோதி சிங் ரதோர் மீது இந்திய தண்டனை சட்டம் 341/505(1)(b)/507 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications