ஹைதராபாத்தில் அமைகிறது தடுப்பூசி பரிசோதனை மையம்.. பிரதமர் நிவாரண நிதியிலிருந்து பணம் ஒதுக்கீடு
டெல்லி: ஹைதராபாத்தில் தடுப்பூசி பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்காக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

"ஹைதராபாத்தில் தடுப்பூசி பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியதற்கு மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடிக்கு நான் நன்றி கூறுகிறேன். ஹைதராபாத்தில் மருந்தியல் துறையின் விரிவான வளர்ச்சியை நோக்கி ஒரு பெரிய படியாகும், இது கொரோனா தடுப்பூசிகளின் உற்பத்தியையும் அதிகரிக்கும்" என்று கிஷன் ரெட்டி, ட்வீட் செய்துள்ளார்.
தடுப்பூசி உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த, நாட்டில் அதிக தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் தேவை என்று கிஷன் ரெட்டி மேலும் கூறியுள்ளார்.
கசவுலியில் உள்ள மத்திய மருந்து ஆய்வகம் மற்றும் நொய்டாவில் உள்ள தேசிய உயிரியல் நிறுவனம் ஆகிய இரண்டு தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் தற்போது நாட்டில் உள்ளன.
இதுபோன்ற இரண்டு ஆய்வகங்களை நிறுவுவதற்காக மார்ச் 6 ஆம் தேதி பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒன்று புனே, தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் அமைய உள்ளது, மற்றொன்று ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு பயோடெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் அமைய உள்ளது.
இதில் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வக பணிகள், அடுத்த ஒரு மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications