ஜி 20 கூட்டமைப்பு: சின்னம், தீம் வெளியீடு.. "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்".. பிரதமர் மோடி
டெல்லி: ஜி 20 மாநாட்டிற்கான லோகோ, தீம், மற்றும் தாரக மந்திரம் ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 'ஜி 20 க்கான இந்தியாவின் கருப்பொருள் (தீம்) ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதாகும்' என்று பேசினார்.
உலகின் முன்னணி 20 நாடுகளின் மிக முக்கிய கூட்டமைப்பாக ஜி 20 கூட்டமைப்பு உள்ளது.
இந்த அமைப்பில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பு
ஜி 20 நாடுகளின் அமைப்பின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு சுழற்சி முறையில் வகித்து வருகிறது. அந்த வகையில் வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்தியா வசம் வருகிறது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) யில் 85 சதவிகிதம் இந்த நாடுகளுக்கு சொந்தமானதாக உள்ளதால், ஜி 20 கூட்டமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

200 மாநாடுகளை கூட்ட திட்டம்
அதேபோல், உலகில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 65 சதவிகிதம் இந்த 20 நாடுகளுடையது தான். எனவே இந்த ஜி 20 கூட்டமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தியா தலைமையில் இந்த கூட்டமைப்பு செயல்பட உள்ள நிலையில், 200 மாநாடுகளை கூட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாடும் அடங்கும்.

ஒரே பூமி, ஒரே குடும்பம்
இந்த நிலையில், ஜி 20 மாநாட்டிற்கான லோகோ, தீம், மற்றும் தாரக மந்திரம் ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: - ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே கட்டமைப்பு என்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் புரட்சியை இந்தியா வழிநடத்தியது. ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்ற உலகளாவிய சுகாதார முயற்சியை இந்தியா வலுப்படுத்தியது. தற்போது ஜி 20 க்கான இந்தியாவின் கருப்பொருள் (தீம்) ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதாகும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

ஜி 20 க்கான சின்னம்
அதேபோல், ஜி 20 கூட்டமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில் அது தொடர்பாக லோகோ மற்றும் இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ''ஜி 20 கூட்டமைப்பு இந்தியா தலைமை வகிக்கும் வரலாற்று நிகழ்வுக்காக நான் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். ஜி 20 க்கான சின்னம் நமது நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications