காந்தியின் பேரன்.. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறக்கப்படுகிறாரா? யாருங்க இவர்?
டெல்லி: எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக இன்று டெல்லியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மேற்கு வங்க மாநில முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபால் கிருஷ்ணா காந்தி எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று துவங்கியது.
ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18ல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற பாஜக, எதிர்க்கட்சிகள் முடிவு செய்து பணிகளை துவங்கி உள்ளன.
Exclusive: வெளியே கேட்காத ஓலம்! கோயம்பேடு மார்க்கெட்டின் இன்னொரு முகம் உங்களுக்கு தெரியுமா? வீடியோ!
எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை
குறிப்பாக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி திட்டமிட்டார். இதற்காக அவர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதன்படி பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து இன்று டெல்லியில் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
சரத் பவார் மறுப்பு
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்துக்காக நேற்று மம்தா பானர்ஜி டெல்லி புறப்பட்டு சென்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை நிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று திடீரென்று சரத்பவாரை, மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். அப்போது இருவரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விஷயங்களை விவாதித்ததாக கூறப்படுகிறது.
கோபால்கிருஷ்ண காந்தி பெயர்...
இதற்கிடையே தான் எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க முன்னாள் கவர்னரான கோபால்கிருஷ்ண காந்தியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக சில எதிர்க்கட்சி தலைவர்கள் கோபால்கிருஷ்ண காந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியதாகவும், அவர் யோசித்து இன்று தனது முடிவை கூறுவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் பாசிட்டிவ்வான முடிவை தெரிவிப்பார் என அவரிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர்கள் நம்பிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது.
யார் இந்த கோபால் கிருஷ்ண காந்தி
77 வயதாகும் கோபால்கிருஷ்ண காந்தி, மகாத்மா காந்தி-ராஜாஜியின் பேரன் ஆவார். இவர் இந்தியாவுக்கான உயர் ஆணையராக தென்ஆப்பிரிக்கா, இலங்கையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதோடு 2004 முதல் 2009ம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநில கவர்னராக இருந்தார். கடந்த 2017ம் ஆண்டு நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய கோபாலகிருஷ்ண காந்தி பாஜகவின் வெங்கையா நாயுடுவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.