"ஆக்ஸிஜன் மரணங்கள்"... லிஸ்ட் போட்டு குறை சொன்ன பிரியங்கா... பாஜக விளக்கத்துக்கு
மத்திய அரசை பிரியங்கா காந்தி விமர்சித்து உள்ளார்
டெல்லி: கொரோனா தொற்று காலத்தில், உள்நாட்டுத் தேவையை கணக்கில் கொள்ளாமல் ஆக்சிஜன் ஏற்றுமதியை 700 சதவீதம் வரை மத்திய அரசு அதிகரித்தது... ஆக்சிஜனை கொண்டு செல்ல டேங்கர்கள் எதையும் ஏற்பாடு செய்யவுமில்லை.. அதிகாரக்குழு மற்றும் நாடாளுமன்ற குழுவின் அறிவுரையையும் அரசு புறக்கணித்தது.. ஆக்சிஜன் வழங்க எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை" என மத்திய அமைச்சரின் விளக்கத்துக்கு பிரியங்கா காந்தி கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.
இந்த முறை இந்தியாவில் 2வது தொற்றானது, படுமோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.. பெரியவர்களையும் விட்டு வைக்கவில்லை.. குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.
தொற்று பாதிப்பு அதிகமாகிவிட்டதால், நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.. இதனால் ஏராளமான உயிர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது பல மாநிலங்களில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
கேள்வி
இந்நிலையில், தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தில், இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.. "2வது அலையில் அளவுக்கு அதிகமான ஆக்சிஜன் பற்றாக்குறையால், நிறைய நோயாளிகள் ரோடுகளிலும், ஆஸ்பத்திரிகளிலும் இறந்தனரே.. அது உண்மையா?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்..
இறப்பு விகிதம்
அதில், "கொரோனா தொற்று இறப்புகளை தெரிவிப்பதற்காக, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகத்தால் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன.. அதன்படிதான், எல்லா மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தொற்று பாதிப்புகள் மற்றும் மரணங்கள் குறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தன.. அந்த வகையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் எங்குமே யாருமே உயிரிழந்ததாக, மாநிலங்களோ, யூனியன் பிரதேசங்களோ தெரிவிக்கவில்லை' என்றார்.
விளக்கம்
அமைச்சர் இப்படி ஒரு விளக்கத்தை தந்ததுமே அது சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.. விவாதங்கள் கிளம்பின.. விமர்சனங்கள் எழுந்தன.. சில மாநில அரசுகளும்கூட அமைச்சரின் பதிலை விமர்சித்தன.. இந்நிலையில்தான், அமைச்சரின் இந்த விளக்க பதிலை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்... இதுகுறித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..
ஆக்சிஜன்
அதில், "ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய அரசு சொல்கிறது.. உயிரிழப்புகள் எதனால் ஏற்பட்டதென்றால், தொற்று காலத்தில் உள்நாட்டிலேயே ஆக்சிஜன் தேவை அதிகம் இருந்த நிலையில் அதைப் புறக்கணித்து விட்டு, அரசு ஆக்சிஜன் ஏற்றுமதியை 700 சதவீதம் வரை அதிகரித்தது... ஆக்சிஜனை கொண்டு செல்ல டேங்கர்கள் எதையும் ஏற்பாடு செய்யவுமில்லை.. அதிகாரக்குழு மற்றும் நாடாளுமன்ற குழுவின் அறிவுரையையும் அரசு புறக்கணித்தது..
முன்னேற்பாடுகள்
ஆக்சிஜன் வழங்க எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை.. ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி அமைப்புகளை அமைக்கவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை" என அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டி உள்ளார். பிரியங்கா லிஸ்ட் போட்டு சொன்ன இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு என்ன பதிலளிக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!