கொஞ்சம் கொஞ்சமாக வருமான வரி விலக்குகளை நீக்க விரும்புகிறோம்.. நிர்மலா சீதாராமன்
டெல்லி: அனைத்து வருமான வரி விலக்குகளையும் படிப்படியாக நீக்கவே அரசு விரும்புகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி விகிதத்தை இன்று அறிவித்தார்.
ஆனால் புதிய திட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கை பெற வேண்டும் என்றால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, எல்ஐசி காப்பீடு, வீட்டுக் கடன் வட்டி உள்ளிட்டவற்றை கோர முடியாது. அதைக் காட்டாதவர்களுக்கு மட்டுமே புதிய வருமான வரி விகித சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய முறை
அதேநேரம் பழைய திட்டத்தின் கீழ் வரி செலுத்த விரும்புவோர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, எல்ஐசி காப்பீடு, உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளை ஆதாரமாக காண்பித்து வரி சலுகைகளை பயன்படுத்த முடியும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த இரண்டில் எதை வேண்டும் என்றாலும் தேர்வு செய்யலாம் என்று பட்ஜெட்டில் அறிவித்தார்.
வரி கட்டமைப்பு
பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் வருமான வரி விலக்கு நடைமுறைகள் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், யாருக்கு வருமான வரி விலக்கு வேண்டுமோ அவர்கள் பழைய முறையை தேர்வு செய்யலாம். வேண்டாதவர்கள் புதிய முறையை தேர்வு செய்யலாம் . அரசு இப்படி செய்ததற்கு காரணம் வரி கட்டமைப்பை எளிதாக்கும் அளவுக்கு விகிதங்களை குறைக்க வேண்டும் என்று தான் செய்தது. இதன் மூலம் பணம் மக்களின் கைகளில் உள்ளது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் விரும்பினோம். கடந்த செப்டம்பரில் கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்ட பின்னர் இப்போது வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
பட்ஜெட்டில் விளக்கம்
வாராக்கடனில் வங்கிகள் சிக்கித்தவித்து வரும் நிலையில் வங்கிகளுக்கான கூடுதல் தொகை ஒதுக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில் தேவைப்படும் போது வங்கிகளுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். ஏனெனில் பட்ஜெட்டில் இதை பற்றி அவர் குறிப்பிடவில்லை.
வருமான வரி விலக்கு
தனிநபர்கள் அதில் முதலீடு செய்தேன், வீட்டு வாடகை கட்டினேன், பிள்ளையை படிக்க வைத்தேன், எல்ஐசியில் முதலீடு செய்தேன். பிஎப்பில் பணம் போட்டுள்ளேன் என்று சொல்லி விலக்கு கேட்டு வரக்கூடாது போன்ற நிபந்தனையின் அடிப்படையில் வருமான வரி விகிதங்களைக் குறைத்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதுபற்றிய கேள்விக்கு அனைத்து வருமான வரி விலக்குகளையும் நீக்கவே அரசாங்கம் விரும்புகிறது என்று அதிரடியாக பதில் அளித்தார்.
விஆர்எஸ் திட்டம்
இதனிடையே ஓய்வூதிய பலன், ஓய்வூதியத்தை மாற்றியமைத்தல், ஓய்வூதியம் பெறுவது, வி.ஆர்.எஸ். கீழ் ரூ .5 லட்சம் வரை தொகை, ஈ.பி.எஃப்.ஓ.யில் நிறுவன முதலாளியின் பங்களிப்பு, என்.பி.எஸ்ஸில் பெறப்பட்ட கட்டணம், விருதுகள் செலுத்துதல் உள்ளிட்ட விதிவிலக்குகள் தொடர்ந்து இருக்கும் என்று நிதித்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே விளக்கம் அளித்தார்.