காஷ்மீர் முதலீடு - ரிலையன்ஸ், வேதாந்தா, அதானிகள்... கார்ப்பரேட் வசமாகும் இந்திய நிலப்பகுதிகள்?
டெல்லி: நமது தேசத்தின் நிலப்பரப்புகளானது ரிலையன்ஸ், வேதாந்தா, அதானி போன்ற பெரும் கார்ப்பரேட் குழுமங்களின் வசம் ஒப்படைத்து வரும் வேலையைத்தான் அரசுகள் கனகச்சிதமாக செய்து வருகின்றன.
1980களின் தொடக்கத்தில் ஆண்டாண்டு காலமாக தொழில்துறையில் இருந்த நிறுவனங்கள்தான் வர்த்தகத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தன. 1980களின் நடுப்பகுதியில் திருபாய் அம்பானியின் பெயர் பல்வேறு வகைகளில் அடிபட தொடங்கியது.
அரசியல்வாதிகளை, ஊடகங்களை தமது கைகளில் போட்டுக் கொண்டு முறைகேடாக சலுகைகளைப் பெற்றவர் அம்பானி என்கிற குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பங்குச் சந்தையில் சிறுமுதலீட்டாளர்களை களமிறக்கி ஒட்டுமொத்த சந்தையையே தம் வசமாக்கி ஆட்டுவித்தவர் அம்பானி என்கிற சர்ச்சையும் ஓயாது இருந்தது.
அம்பானி ஆட்டம்
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தவரை அம்பானி ஆடிய ஆட்டம் அதுவரை கமுக்கமாக தொழில்களை செய்து வந்த நஸ்ஸி வாடியா போன்றோரை மிரட்டியிருந்ததை நாடு நன்கறியும். அதுவும் விபிசிங் பிரதமராக இருந்த காலத்தில் அரசுக்கும் அம்பானிக்கும் ஏழாம் பொருத்தம். அரசை கட்டுப்படுத்த கூடிய பெரும் நிறுவனங்கள் இல்லாது இருந்தது.
அரசியல்வாதிகள் ப்ளஸ் கார்ப்பரேட்டுகள்
1990களில் இந்திய பொருளாதாரம் திறந்துவிடப்பட்டது. அப்போதுதான் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் திட்டமிட்டு கை கோர்த்து களத்தில் குதித்தனர். இந்த மண்ணில் கிடைக்கும் அத்தனை வளங்களையும் எப்படியெல்லாம் பகிர்ந்து கொள்வது என்பதில் இருதரப்பும் தெள்ளத் தெளிவாக இருந்தது. இந்த பங்கு பிரிப்புக்கு உடன்படாத மறைந்த ஜெய்பால் ரெட்டி போன்ற முதுபெரும் தலைவர்கள் பந்தாடப்பட்ட கதைகளும் தேசம் அறியும்.
இந்திய நிலப்பரப்புகள் இவர்களிடம்
இன்றைய நிலையில் பிரதான கார்ப்பரேட் நிறுவனங்களாக ரிலையன்ஸ், வேதாந்தா, அதானி குழுமங்கள்தான் இந்திய நிலப்பரப்பு எங்கும் கோலோச்சுகின்றன. காவிரி டெல்டா வேதாந்தா குழுமத்துக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. ஒடிஷாவின் மலைவளங்கள் வேதாந்தா உள்ளிட்ட அத்தனை சிறு பெரு கார்ப்பரேட் கம்பெனிகளும் விழுங்கிக் கொண்டிருக்கின்றன.
பங்கு பிரிவினைகள்
அரபிக் கடல் இயற்கை எரிவாயு வளத்தை ரிலையஸும் அதானி குழுமங்களும் பங்கு போட்டு பிரித்து கொண்டிருக்கின்றன. தொழில்நுட்பத் துறையில் இனி ரிலையன்ஸ் குழுமம்தான் என்கிற ஒற்றை நிறுவன முறையை உருவாக்க அரசுகள் படாதபாடுபடுகின்றன.
காஷ்மீரில் முதலீடு
இதோ ஜம்மு காஷ்மீரம் எனும் ஆப்பிள்களின் தேசம் இரண்டு துண்டாக பிரிக்கப்பட்டதன் ஈரம் கூட காயவில்லை. ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி அறிவிக்கிறார்... இனி ஜம்மு காஷ்மீரமும் லடாக்கும் எங்கள் வசம் என்பதைப் போல அங்கே தொழில் முதலீடுகள் தொடர்பாக அடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வரும் என்கிறார்.
எதிர்காலம் என்னவாகுமோ?
அஸ்ஸாஸின் கனிம, எண்ணெய் வளங்கள் பன்னெடுங்காலமாக அரசாங்கத்தால் அள்ளப்பட்டதன் விளைவாகவே 1980களில் அங்கே விடுதலை கோஷம் ஆயுதமுனையில் பிறந்தது என்கிறது வரலாறு.. இப்போது தனிநபர்களின் கார்ப்பரேட்டுகள் இந்த கொள்ளை சூறையாடலில் இறங்கி இருக்கிறார்கள் என்கிறபோது தேசத்தின் எதிர்காலத்தை நினைத்தால் ஈரக்குலைதான் நடுங்கும்!