ஜிஎஸ்டி இழப்பீடு...பற்றாக்குறை ரூ. 2.35 கோடி...வரி விதிப்பு இல்லை... நிர்மலா சீதாராமன்!!
டெல்லி: நடப்பாண்டில் ஏற்பட்டு இருக்கும் அனைத்து ஜிஎஸ்டி இழப்பீடுகளையும் ஆர்பிஐயுடன் ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்படும். மாநிலங்கள் முன்பு இரண்டு வாய்ப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று ஜிஎஸ்டி கூட்டத்திற்குப் பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறையாக ரூ. 2.35 கோடியாக உள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடாக வசூலிக்கப்பட்ட வரி ரூ. 95,444 கோடியாக இருக்கிறது. 2020 நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ .1.65 லட்சம் கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது என்று நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் விற்பனை மற்றும் சேவை வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு விதித்து வருகிறது. இதனால், மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்டப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது. கடந்த நிதியாண்டில் 1,65,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
ஆனால் நடப்பாண்டில் கொரோனா தாக்கம் காரணமாக ஜிஎஸ்டி வசூலில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக இன்று 41வது ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டி இருந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், யூனிய பிரதேசம் மற்றும் மாநில நிதித்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சுமார் 5 மணி நேரம் இந்தக் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடந்தது.
கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ''கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டில் ஜிஎஸ்டி வசூல் பெரிய ஆல்வில் பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு சட்டத்தின்படி மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நிதியாண்டு 2019-20ல் மாநிலங்களுக்கு இழப்பீடாக மத்திய அரசு 1.65 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ரூ. 13,806 வழங்கப்பட்டுள்ளது. வரித் தொகையாக 95,444 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக 2017 - 2022 வரை வழங்க வேண்டும் என்று அட்டார்னி ஜெனரால் வலியுறுத்தியுள்ளது. வரியில் ஏற்படும் இழப்பை ஈடு கட்டுவதற்கு வருவாயை பாதுகாக்க வேண்டும். ஆர்பிஐயுடன் ஆலோசித்த பின்னர் இரண்டு வாய்ப்புகள் மாநிலங்கள் முன்பு வைக்கப்படும். இதுபற்றி ஆலோசிக்க ஏழு நாட்கள் கொடுக்குமாறு மாநிலங்கள் எங்களை கேட்டுக் கொண்டுள்ளன. மாநிலங்களுக்கு மத்திய அரசின் இரண்டு வாய்ப்புகள் அனுப்பி வைக்கப்படும். இது நடப்பு ஆண்டுக்கு மட்டும் பொருந்தும். அடுத்த நிதியாண்டு குறித்து தனியான திட்டம் வகுக்க வேண்டியது உள்ளது.
நடப்பாண்டில் ஏப்ரல்-ஜூலை மாத கால கட்டத்தில் 1.5 லட்சம் கோடி அளவிற்கு இழப்பீடு செலுத்தி இருக்க வேண்டும். ஆனால், ஏப்ரல், மே மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் மிகவும் குறைவாக இருந்தது'' என்று தெரிவித்தார்.
ஆர்பிஐயுடன் ஆலோசித்த பின்னர் மாநிலங்களுக்கு குறைந்த வட்டியில் ரூ. 97,000 கோடி ரூபாய் கடன் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று நிதித்துறை செயலாளர் அஜய் பாண்டே தெரிவித்துள்ளார்.
மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு - உச்சநீதிமன்றம் சொன்ன காரணம் என்ன
இந்த ஆண்டு ஜிஎஸ்டி இழப்பீட்டு இடைவெளி ரூ .2.35 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் ஏற்படும் இழப்பீடு பற்றாக்குறை ரூ .97,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டை மத்திய அரசின் பொது நிதியில் இருந்து வழங்க முடியாது என்று நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
நடப்பாண்டில் இழப்பீட்டை ஈடுகட்டுவதற்கு வரி வசூலை அதிகரிக்கும் என்ற கேள்விக்கே இடம் இல்லை என்றும் நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.