'நீங்கள் இறந்துவிடுவீர்கள்'.. போலீசை சாபமிட்டதால் வந்த வினை.. மற்றொரு சாமியார் கைதின் பின்னணி
டெல்லி: ஹரித்வாரில் 'ஆயுதம் தூக்குவோம்' என்று சர்சைக்குரிய வகையில் பேசிய சாமியார் யதி நரசிங்கானந்த்தை உத்தரகாண்ட் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படும் இரண்டாவது நபர் இவராவார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இந்து சாமியார்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சாமியார்கள் சிலர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் சர்ச்சை எழுந்தது.
இந்து ரக்சா சேனா அமைப்பின் தலைவர் பிரபோதானந்த் கிரி, பாஜக தலைவர்கள் அஸ்வினி உபாத்யாய், உதிதா தியாகி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஹரித்துவார் வெறுப்பு பேச்சு.. மேலும் ஒரு சாமியார் அதிரடி கைது
சர்ச்சை சாமியார்கள்
''இந்து மதம் அழிகிறது. அண்டை நாடுகளில் இந்துக்கள் விரட்டப்படுகிறார்கள். நம்முடைய நாட்டிலும் இந்துக்களுக்கு இதே நிலைதான். நாம் இப்போதே ஆயுதம் தூக்க வேண்டும். நாம்தான் தாக்க வேண்டும். கொல்ல வேண்டும். இல்லையென்றால் நாம் கொல்லப்படுவோம் என்று இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்து சாமியார்கள் மத வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்கள். இதேபோல் டெல்லியில் நடந்த இந்து சாமியார்கள் மாநாட்டிலும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து கூறியதாக புகார் எழுந்தது.
76 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம்
ஆனால் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது போலீசார் பெயரளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் 10 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒருவர்தான் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்து சாமியார்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக நீதித்துறை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு, உச்ச நீதிமன்றத்தின் 76 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம் ஒன்றை ஏற்கனவே அனுப்பினார்கள்.
சாமியார் கைது
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தும்படியும் 5 முன்னாள் ராணுவ அதிகாரிகளும் பிரதமர் மோடிக்கும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதினார்கள். இந்த நிலையில் ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் இந்து மதத் தலைவர் யதி நரசிங்கானந்த் என்பவரை உத்தரகாண்ட் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
'நீங்கள் இறந்துவிடுவீர்கள்'
இந்த வழக்கில் ஜிதேந்திர தியாகி என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர். அப்போது போலீசாரை சாமியார் யதி நரசிங்கானந்த் கடுமையாக பேசினார். ''ஒரு போலீஸ் அதிகாரி எப்படி நம் பக்கம் இருப்பார்'' என்று கூறிய அவர் ''நீங்கள் அனைவரும் இறந்துவிடுவீர்கள்'' என்று போலீசாரை சபித்தார். இந்த நிலையில்தான் சாமியார் யதி நரசிங்கானந்த்தை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு சாமியார்
சாத்வி அன்னபூர்ணாவையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.