அரசியமைப்பை இடிக்கிறார்கள்... தாக்குதலின் தொடக்கமே மதவெறுப்பு பேச்சுதான் - டெல்லி ஐகோர்ட் வேதனை
டெல்லி: மக்கள் பிரதிநிதிகளின் மத வெறுப்பு பேச்சு சகோதரத்துவத்துக்கு எதிரானது என்றும் அத்தகையோர் அரசியலமைப்பை இடிக்கிறார்கள் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
2020 ஆம் ஆண்டு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள், மாணவர்கள், செயல்பாட்டாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டிக்காட்டி "துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்" என்று கூறியதாலே வன்முறை பெரும் அளவில் வெடித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இவர்கள் பாகிஸ்தானின் குரல்! - சந்திரசேகர ராவை கடுமையாகத் தாக்கும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
வழக்கு தள்ளுபடி
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் பிருந்தா காரத் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நேரம் இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி சந்திர தாரி சிங் அரசியல் மற்றும் மத தலைவர்களின் வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை முன்வைத்தார்.
அரசியலமைப்பை இடிக்கிறார்கள்
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியல் மற்றும் மத தலைவர்கள் சாதி, மதம், பகுதி, இனம் தொடர்பாக வெறுப்பு பேச்சுக்களை பேசுவது சகோதரத்துவம் என்ற கோள்கைக்கே எதிரானது. அதுபோன்றவர்கள் அரசியலமைப்பு நெறிகளையும் இடித்துவிடுகிறார்கள். இத்தகைய பேச்சுக்கள் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டு இருக்கும் அடிப்படையான கடமைகளை அவமதிக்கும் செயல். மத்திய மற்றும் மாநில அரசுகள் வெறுப்பு கருத்துக்களை தெரிவிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாக்குதலின் தொடக்கம்
குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீதான தாக்குதல்களின் தொடக்கப்புள்ளி இதுபோன்ற வெறுப்பு பேச்சுக்கள்தான். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும் இப்படி பேசுவதும் தலைவர்களுக்கு அழகல்ல. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தொகுதி வாக்காளர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயம் மற்றும் நாட்டின் மீதும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்.
தடுக்க வேண்டும்
வெறுப்பு பேச்சுக்கள் என்பது எந்த தனிப்பட்ட மதத்தினர் மற்றும் பகுதி மக்களுடன் சுருங்கிவிடாது. வெறுப்பு பிரச்சாரங்களை அனைத்து மட்டங்களிலும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து சட்ட அமலாக்க நிறுவனங்களும், தற்போதைய சட்டத்தை முட்டுக்கட்டையாக்கி விடக் கூடாது."