ஹெலிகாப்டர் விபத்து.. வானிலை காரணமா?.. தவறு நடந்தது எங்கே?.. முன்னாள் விமானப்படை தளபதி விளக்கம்!
டெல்லி: நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் பயிற்சி மையம் அருகில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த பயங்கர விபத்தில் விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவருக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர் விபத்து
வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு செல்ல முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் கோவைக்கு வந்தனர். சூலூரிலிருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு எம்ஐ ரக விமானத்தில் அவர்கள் சென்றபோதுதான் விபத்து நிகழ்ந்துள்ளது. கடும் பனிமூட்டம் காரணமாக விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடியபடி மரத்தில் 2 முறை மோதி விழுந்து எரிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

Mi-17V-5 வகை
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் Mi-17V-5 என்னும் அதிநவீன ஹெலிகாப்டர் வகையை சேர்ந்ததாகும். இந்த வகை ஹெலிகாப்டர்கள் விமானப்படையின் மிகவும் நம்பகமானவையாகும். சியாச்சின் பனிப்பாறை போன்ற சவாலான சூழ்நிலைகளிலும், ஆபத்தான இடங்களிலும் நூற்றுக்கணக்கான மணிநேரம் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வி.ஐ.பி.கள்
நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவை காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்பட வி.ஐ.பி.க.ளின் பயணத்துக்கு Mi-17V-5 ஹெலிகாப்டர் விருப்பமான தேர்வாக இருந்து வந்தது. ஆனாலும் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர்தான் விபத்து நிகழ்ந்துள்ளது. அதாவது சுமார் 20 நிமிடம் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடியுள்ளது.
Recommended Video

தீர்மானிப்பது கடினம்
இந்த நிலையில் இந்த விபத்தில் என்ன தவறு நடந்தது என்பதை தீர்மானிப்பது கடினம் என்று முன்னாள் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஃபாலி எச் மேஜர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'சூலூரில் இருந்து வெலிங்டனுக்கு ஹெலிகாப்டர் பயண நேரம் 20 முதல் 25 நிமிடங்கள் மட்டுமே. இவ்வளவு குறுகிய விமான காலத்தில் என்ன தவறு நடந்திருக்கும் என்பதை தீர்மானிப்பது மிகவும் கடினம். ஹெலிகாப்டரில் கருப்பு பெட்டியில் குரல் ரெக்கார்டர் மற்றும் தரவு ரெக்கார்டர் உள்ளது. இது விபத்து எவ்வாறு எற்பட்டது என்பது குறித்து யோசனையைத் தரும்' என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications