விவசாயிகளுக்கு ஒன்னும் தெரியாது. யாரோ கீ கொடுக்க, அவங்க போராடுறாங்க... ஹேமமாலினி காட்டம்!
டெல்லி: வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஒன்றும் தெரியாது என்றும் யாரோ சொல்வதை கேட்டு அவர்கள் போராட்டம் நடத்தி வருவதாக ஹேமமாலினி தெரிவித்தார்.
வேளாண் சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு நல்லது. இது நிலைமையை அமைதிப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்தது.
3 வேளாண் சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
இந்த நிலையில் பாலிவுட் நடிகையும், மதுரா எம்.பி.யுமான ஹேமா மாலினி விவவாயிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியாது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
வேளாண் சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு நல்லது. இது நிலைமையை அமைதிப்படுத்தும். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் ஒருமித்த கருத்துக்கு வர விவசாயிகள் தயாராக இல்லை. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாது. வேளாண் சட்டத்தில் குறித்து முழுதாக அவர்களுக்கு தெரியாது. யாரோ சொல்வதை கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.