அன்று காந்தி அரக்கனாக சித்தரிப்பு.. இன்று நோட்டுகளில் நேதாஜி படம் வேண்டுமாம்.. இந்து அமைப்பு சர்ச்சை
டெல்லி: தொடர்ந்து சர்ச்சை கருத்துகளைக் கூறி வரும் அகில பாரத இந்து மகாசபை அமைப்பு, இப்போது மீண்டும் ஒரு வினோத கோரிக்கையை முன்வைத்து உள்ளது.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு பல்வேறு தலைவர்கள் போராடி இருந்தனர். இருப்பினும், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த மகாத்மா காந்தியே தேச தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
இதன் காரணமாகவே இந்தியாவில் இப்போது அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் காந்தியின் புகைப்படம் மட்டுமே இடம் பெற்று உள்ளது. இது தொடர்பாகவே அகில பாரத இந்து மகாசபை கோரிக்கை வைத்து உள்ளது.
இப்படித்தானே தமிழர்களுக்கும் வலிக்கும்.. இந்தியா டுடே சேனலில் திடீரென பெண் நெறியாளர் செய்த
வினோத கோரிக்கை
அதாவது கரன்சி நோட்டுகளில் இருக்கும் மகாத்மா காந்தியின் படத்திற்குப் பதிலாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்களிப்பு காந்தியை விடக் குறைந்தது இல்லை என்று அகில பாரத இந்து மகாசபை கூறி உள்ளது. இதே அமைப்பு தான் துர்கா பூஜையில் அரக்கன் சிலையைக் காந்தியைப் போல வடிவமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேதாஜி படம்
சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய அந்த அமைப்பின் மாநில செயல் தலைவர் சந்திரச்சூர் கோஸ்வாமி, "நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்பு மகாத்மா காந்தியின் பங்களிப்பை விடக் குறைவானது இல்லை. எனவே இந்தியாவின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜியை கவுரவிக்கும் வகையில் அவரது படத்தை கரன்சி நோட்டுகளில் இடம் பெறச் செய்ய வேண்டும். காந்தியின் படத்திற்குப் பதிலாக நேதாஜி படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும்" என்றார்.
போராடுவோம்
மேற்கு வங்கத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாயத்துத் தேர்தலிலும் களமிறங்க உள்ளதாக அவர் அறிவித்தார், இது குறித்து அவர் கூறுகையில், "இங்கு இந்து வங்காளிகளின் உரிமைகளை திரிணாமுல் பாஜக என இருவராலும் பாதுகாக்க முடியவில்லை. அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் போராடுவோம்.
பிரிக்கக் கூடாது
மேற்கு வங்கத்தைப் பிரிக்க வேண்டும் எனச் சொல்லும் பாஜக எம்எல்ஏக்களின் கருத்துகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. மாநிலத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்காகவே நாங்கள் பணியாற்றி வருகிறோம். இங்கு அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் அமைப்பிற்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. அடுத்தாண்டு நடக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்வோம்" என்றார்.
கடும் எதிர்ப்பு
காந்தி குறித்து இவர்கள் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் இதைக் கடுமையாகச் சாடியிருந்தனர். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்கு முக்கியமானது என்ற ஆதிர் சவுத்ரி, காந்தியைக் கொன்றவர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும் என்றும் இப்போது அவர்கள் தினசரி காந்தியின் கொள்கைகள் கொல்கின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அசுரனாக காந்தி
இந்த அமைப்பு துர்கா பூஜையில் வைத்து இருந்த அரக்கன் சிலை தான் காந்தியைப் போலவே இருந்தது. அரக்கன் சிலைக்கு வெள்ளை நிற வேட்டி மற்றும் கண்ணாடி அணிவித்துக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும், இது எதிர்பாராத நிகழ்வு என்று மறுத்த அகில பாரத இந்து மகாசபை அமைப்பு, இது எதிர்பாராத வகையில் நடந்த நிகழ்வு என்றும் இதை வைத்து சிலர் சர்ச்சை ஏற்படுத்த முயல்வதாகவும் தெரிவித்தது.