"தாவூத்தை தப்பிக்க விட்டதே ராஜீவ் தான்! பல தீவிரவாதிகள் காங். ஆட்சியில் தப்பித்தனர்" அமித் ஷா குற்றச்சாட்டு
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடந்து வரும் நிலையில், இந்த விவாதத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். காங்கிரஸ் ஆட்சியில் பல தீவிரவாதிகள் நாட்டை விட்டுத் தப்பி ஓடியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாவூத் இப்ராஹிம் கூட ராஜீவ் காந்தி ஆட்சியிலேயே தப்பி ஓடியதாகச் சாடினார். மேலும், பயங்கரவாதத்திற்கு வேராக இருக்கும் பாகிஸ்தான் உருவாகவே நேரு தான் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி நேற்றைய தினம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

காங்கிரஸ் எம்பி கேள்வி
இரண்டாவது நாளாக இன்றும் இரு அவைகளிலும் விவாதம் தொடர்ந்தது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்களும் இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசினர். அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தியது ஏன் என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதில் ஏன் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது என்று காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் கேள்வி எழுப்பியிருந்தார்.
அமித் ஷா பதில்
இந்த கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, "பாகிஸ்தானுக்குள் தான் பயங்கரவாதத்தின் அனைத்து வேர்களும் உள்ளன. மேலும், காங்கிரஸ் கட்சியின் தவறான முடிவுகளே பாகிஸ்தான் உருவாகக் காரணம். காங்கிரஸ் தலைவர்கள் தேசப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் என்ற நாடே உருவாகியிருக்காது.
1948-ல் காஷ்மீரில் நமது ராணுவம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருந்தது. சர்தார் வல்லபாய் படேல் போர் நிறுத்தம் வேண்டாம் என்று பல முறை திரும்பத் திரும்பச் சொல்லியும், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அதைக் கேட்கவில்லை. ஒருதலைபட்சமாகப் போர் நிறுத்தத்தை அறிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்று வரை தொடர நேருவின் அந்த ஒருதலைபட்ச போர் நிறுத்த அறிவிப்புதான் காரணம். இதற்கு ஜவஹர்லால் நேருவே முழுப் பொறுப்பு" என்றார்.
தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.. அவர்களை ஏன் பிடிக்க முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கும் அமித் ஷா பதிலளித்தார். ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் அவர்கள் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அமித் ஷா, "இதற்கு என் சார்பாகப் பாதுகாப்புப் படையினர் பதிலளித்துள்ளனர். ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொன்றது" என்று அவர் கூறினார்.
தாவூத் இப்ராஹிம்
மேலும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதுதான் பல பயங்கரவாதிகள் நாட்டை விட்டுத் தப்பி ஓடிவிட்டார்கள் என்றும் அமித் ஷா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ராஜீவ் காந்தி ஆட்சியில் இருந்தபோது 1986ல் தாவூத் இப்ராஹிம் தப்பி ஓடிவிட்டார். சையத் சலாவுதீன், டைகர் மேமன், அனீஸ் இப்ராஹிம் காஸ்கர் ஆகியோர் 1993ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தப்பி ஓடிவிட்டனர். ரியாஸ் பட் கல் 2007ம் ஆண்டிலும், இக்பால் பட் கல் 2010ம் ஆண்டிலும் தப்பி ஓடிவிட்டனர்.
அப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்றது.. ஏன் இந்த பயங்கரவாதிகள் எல்லாம் நாட்டை விட்டுத் தப்பி ஓடினார்கள் என்பதற்கு ராகுல் காந்தி இப்போது பதில் சொல்லட்டும்" என்று அமித் ஷா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications