மத்திய பட்ஜெட் 2025 எப்படி? நடுத்தர வர்க்கத்தினருக்கு ஜாக்பாட் மட்டுமல்ல.. அறிய வேண்டிய மறுபக்கம்
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய நிவாரணமாக ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பதாகவும், வரி அடுக்குகளை மறுசீரமைப்பதாகவும் அறிவித்துள்ளார். லோக்சபாவில் இன்று தொடர்ச்சியான எட்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அடுத்த தலைமுறையின் சீர்திருத்தங்களுக்கான ரூட்டை போட்டிருக்கிறார்.
ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கும் தனிநபர்களுக்கு வருமான வரி இல்லை என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில், வரி அடுக்குகளை மறுசீரமைப்பது, வரி கட்டமைப்பை எளிமைப்படுத்துவதற்கும் வரி செலுத்துவோர் மீதான நிதிச் சுமையைக் குறைப்பதற்கும் மிகப்பெரிய முயற்சி எடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த முடிவு காரணமாக, இத்தனை நாட்களாக சிக்கி தவித்து வந்த வரிவிதிப்பு முறைகளை இனி நடுத்தர வர்க்கம் எளிதாக அணுக வாய்ப்பு உள்ளது.

கட்டமைப்பு சீர்திருத்தங்களில் கவனம் : வரி சீர்திருத்தங்களுடன், வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சியில், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பை உயர்த்தவும் வரிச் சட்டங்களை எளிமைப்படுத்தவும் நிர்மலா சீதாராமன் மிகப்பெரிய திட்டங்களை வகுத்திருக்கிறார். இதன்படி காப்பீடு துறையில் இடைத்தரகர்கள் மீதான வரிகளைக் குறைப்பதையும் இன்றைய பட்ஜெட்டில் முன்மொழிந்திருப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
நிதி பற்றாக்குறை மற்றும் சந்தை கடன்: பட்ஜெட்டில் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தும் அதே வேளையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஒருங்கிணைப்பு விஷயத்திலும் கவனமாக கையாண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதன்படி 2025-26 நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறை இலக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% ஆக நிர்ணயித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். இந்த இடைவெளியைக் குறைக்க, வரவிருக்கும் நிதியாண்டில் சந்தையில் இருந்து நிகர அடிப்படையில் ரூ.11.54 லட்சம் கோடியை திரட்டவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சமச்சீர் வளர்ச்சி மற்றும் பொருளாதார விரிவாக்கம்: நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டை, பொருளாதார வளர்ச்சிக்கும், அதேநேரம் நிதியை நிர்வகிப்பதிலும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நிதி மேலாண்மையில் புதிய ரூட்டையே உருவாக்கி உள்ளதாக நிதி நிபுணர்கள் கூறுகிறார்கள். நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் முன்மொழிந்த பல்வேறு சீர்திருத்தங்கள் இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய முதலீட்டை ஈர்ப்பதற்கும், பல துறைகளில் உள்நாட்டு வளர்ச்சியை ஆதரிப்பதற்காவும் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நிதிநிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications