"என்ன நடிப்புடா சாமி..!" 500 ரூபாய் நோட்டை 20 ரூபாயாக மாற்றிய ரயில்வே ஊழியர்! எச்சரிக்கையா இருங்க
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரை ரொம்பவே நூதனமான முறையில் அங்கு பணியாற்றிய ஊழியர் ஏமாற்ற முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
பொது இடங்களுக்கு நாம் செல்லும் போது, ரூ. 2000, ரூ. 500 உள்ளிட்ட பெரிய மதிப்புடைய நோட்டுகளை எடுத்துச் செல்ல அனைவருக்கும் ஒருவித அச்சம் நிச்சயம் இருக்கவே செய்யும்.
திருட்டு பயம் ஒரு காரணம் என்றால், எங்குச் சில்லறை தருகிறேன் என்ற பெயரில் ரூ. 2000, ரூ. 500 வாங்கிவிட்டு ஏமாற்றிவிடுவார்களோ என்ற பயம் இன்னொரு பக்கம் இருக்கவே செய்யும்.

ஏமாற்றும் முயற்சி
அப்படியொரு நூதன ஏமாற்றும் முயற்சி தான் டெல்லியில் நடந்துள்ளது. அதுவும் அரசு ஊழியர் ஒருவரே இப்படி மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். டெல்லி ஹஸ்ரட் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முயலும் நபரை டிக்கெட் கவுண்டரில் இருக்கும் இந்த நபர் ஏமாற்ற முயன்றுள்ளார். இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், ரயில்வே நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

பகீர் சம்பவம்
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. இணையத்தில் வேகமாகப் பரவும் அந்த வீடியோ, டெல்லி ஹஸ்ரட் நிஜாமுதீன் ரயில்வே ஸ்டேஷனில் பயணி ஒருவர் குவாலியர் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலுக்கு டிக்கெட் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதற்காக அந்த பயணி, 500 ரூபாய் நோட்டை கவுண்டரில் இருந்த ஊழியரிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்த ஊழியர் செய்த செயல் தான் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

ரூ 500 இல்லை ரூ 20 தான்
அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் வலது கையில் இருந்த அந்த 500 ரூபாயைக் கீழே போட்டுவிட்டு, இடக்கையில் இருந்த 20 ரூபாயை மாற்றிவிட்டார். மேலும், குவாலியர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் 125 ரூபாய் என்றும் டிக்கெட்டிற்கு கூடுதலாக 105 ரூபாயைக் கொடுக்க வேண்டும் என்று அசல்டாக கேட்கிறார். தன்னிடம் கொடுத்தது 500 ரூபாய் நோட்டு இல்லை.. 20 ரூபாய் நோட்டு தான் என்று கூறி, அந்த பயணியையே நம்ப வைக்க முயன்றுள்ளார்.

வீடியோ
இருப்பினும், நல்வாய்ப்பாக இதை அந்த பயணி வீடியோவாகவே எடுத்து வைத்திருந்துள்ளார். அதில் மின்னல் வேகத்தில் 500 ரூபாய் நோட்டை 20 ரூபாயாக மாற்றும் அவர், எதுவுமே தெரியாதது போல நடிப்பதும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. பொதுமக்களை அந்த ரயில் ஊழியர் ஏமாற்றும் வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. நெட்டிசன்கள் பலரும் அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நடவடிக்கை
இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்தனர். இந்த வீடியோவை ரயில்வே சேவா மற்றும் வடக்கு ரயில்வே ட்விட்டர் கணக்குகளையும் டேக் செய்து பலரும் பகிர்ந்தனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற சம்பவங்கள் தங்களுக்கும் நடந்துள்ளதாகப் பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் பல முறை தனக்குச் சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள்
ரயில்வே தொழிற்சங்கங்கள் தங்களைக் காப்பாற்ற வரும் என்ற நம்பிக்கையில் தான் சிலர் இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளனர். அந்த பயணி மட்டும் அந்த வீடியோவை பதிவு செய்யவில்லை என்றால், யாருமே இப்படியொரு சம்பவம் நடந்ததை ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள். மக்களை ஏமாற்றும் இதுபோன்ற ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சாடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications