பதிவு செய்து 10 வருசம் ஆயிடுச்சா.. ஆதாரை புதுப்பிச்சுட்டீங்களா? மிக முக்கியமான அறிவிப்பு
டெல்லி: ஆதாரை பதிவு செய்து 10 வருடம் ஆனவர்கள் புதுப்பிக்க வரும் ஜூன் 14ம் தேதி வரை எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India), இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு ஆதார் அடையாள எண் வழங்குவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனித்துவமாக பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் எண் வழங்கப்படுகிறது.
பிறந்த குழந்தை முதல், இறந்த பின்னர் அந்த பிணத்திற்கு இறுதி செய்யும் வரை இப்போது எல்லா இடங்களிலும் ஆதார் கேட்கப்படுகிறது. கடந்த 10 வருடங்களில் இந்திய மக்களின் வாழ்க்கையில் 'ஆதார்' மிகப்பெரிய அங்கமாகிவிட்டது. சிம்கார்டு வாங்குவதாகட்டும், அரசின் மானியங்கள் கிடைக்க வேண்டும் என்றாலும், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் எது வாங்க வேண்டுமானாலும் ஆதார் கார்டை கையோடு கொண்டு போக வேண்டும்.
இன்னும் சில நாட்களே இருக்கு..பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா..எப்படி செக் செய்வது?
போலி கார்டுகள்
தமிழகத்தில் ஒரே நபர் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ரேஷன் அட்டை வைத்திருந்த போது ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டபோது தமிழகத்தில் எங்கு வசித்தாலும் ஒரே ஒரு ரேஷன் கார்டில் மட்டுமே பெயரை இணைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் பல லட்சக்கணக்கான போலி ரேஷன்கார்டுகள் ஒழிந்து போனது,
வங்கி கணக்கு
இதேபோல் பான்கார்டு உடன் ஆதார் இணைப்பால் இப்போது யாரும் வருமான வரியில் முறைகேட்டில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள எண் பெறுவதற்கு (இ.எம்.ஐ.எஸ்.) அனைவருக்கும் ஆதார் கட்டாயம் ஆனது. பிஎப், அங்கன்வாடி , பத்திரப்பதிவு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு, மின் இணைப்பு வரை இப்போது ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக முறைகேடுகள் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது
கைரேகை
வங்கி பணப்பரிவர்த்தனையில் ஆதார் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது ஏ.டி.எம். கார்டு இல்லாமல், வங்கி கணக்கு எண் இல்லாமல் ஆதார் எண், கைரேகை வைத்து பணம் எடுக்கக்கூடிய ஏ.இ.பி.எஸ். எனப்படும் ஆதார் எனேபல் பேமெண்ட் சிஸ்டம் (ஆதார் ஏ.டி.எம்.) என்ற பணப்பரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
திருத்தங்கள்
இப்படி ஆதார் நம்மோடு ஒன்றிவிட்டநிலையில் ஆதார் எண் பெற்ற ஒவ்வொருவரும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரை புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற புதிய தகவலை, இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு வெளியிட்டுள்ளது ஆதாரில் திருத்தங்கள் செய்வதற்கும், ஆதாரை புதுப்பித்தல் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது.
முகவரி சான்று
ஆதார் பதிவு செய்த பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரை மேலும் வலுப்படுத்தும் வண்ணம் கூடுதல் ஆவணங்களை வைத்து ஆதாரை புதுப்பிக்க வேண்டும். குறிப்பாக (POI - POR) அதாவது பெயருக்கான அடையாள சான்று மற்றும் முகவரிக்கான அடையாள சான்று இரண்டையும் பதிவு செய்வதே புதுப்பித்தலுக்கான சரியான முறை என்கிறது ஆதார் ஆணையம். ஏற்கனவே பயோமெட்ரிக் பதிவு, மொபைல் எண் மாற்றம், பாலினம் குறித்த மாற்றங்கள் செய்திருந்தாலும் தற்போது உங்களுடைய பெயர் மற்றும் முகவரிக்கான புதிய கூடுதல் ஆவணங்களை நிச்சயம் மீண்டும் பதிவேற்றம் செய்துவிடுங்கள்.
கட்டணம் இல்லை
வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி வரை myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பதிவேற்றம் செய்து கொண்டு ஆதாரை புதுப்பித்து பலப்படுத்த முடியும். ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 3 மாத காலத்திற்கு இதற்கு கட்டணம் கிடையாது. ஆனால் அதன்பிறகு கட்டணம் வசூலிப்பார்கள்.
எளிதாக புதுப்பிப்பு
எனவே myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் அல்லது உங்களது மொபைல் போனில் mAadhaar App என்ற ஆன்ட்ராய்டு ஆப் அல்லது IOS செயலியை பதிவிறக்கம் செய்து அல்லது மொபைல் மூலமாகவும் ஆவணங்களை எளிதாக புதுப்பிக்கலாம்.
எப்படி
myaadhaar.uidai.gov.in இணையதளத்தில் உங்களது ஆதார் எண்ணை பதிவு செய்து அதில் தோன்றும் ரகசிய குறியீடு எண்ணை பதிவு செய்தால் ஏற்கனவே ஆதாரில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் (ஓ.டி.பி.) வரும்.அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்தால் டாக்குமெண்ட் அப்டேட் என்பதை கிளிக் செய்து பெயர் மற்றும் முகவரிக்கான சான்றுகளை இணைத்து உங்களது ஆதாரை புதுப்பிக்கலாம்.
ஆதார் சேவை மையம்
நான் இன்னும் மொபைல் எண்ணையே பதிவு செய்யவில்லையே ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண் தொலைந்து விட்டது என்பது உங்கள் பதிலானால் அருகிலுள்ள ஆதார் சேவை மையம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம், வங்கிகள், தபால் அலுவலகங்களுக்கு சென்று மொபைல் எண்ணை பதிவு செய்யலாம். மொபைல் மூலமாகவோ இணையதளம் மூலமாகவோ உங்களுக்கு பதிவு செய்ய தெரியாது என்றால் அருகில் உள்ள ஆதார் சேவை மையங்களை தொடர்பு கொண்டு 50 ரூபாய் பணம் கொடுத்து டாகுமெண்ட் அப்டேட் என்று சொல்லக்கூடிய ஆதார் புதுப்பித்தல் பதிவு செய்வது சிறப்பாக இருக்கும்.
குடும்ப அட்டை
இந்தியன் பாஸ்போர்ட், பான் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மத்திய, மாநில அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, கிசான் போட்டோ பாஸ்புக், பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய மூன்றாம் பாலினத்தோர் அடையாள அட்டை, உள்ளிட்ட ஏதேனும் ஆவணங்களை பெயர் மற்றும் முகவரி சான்றாக பயன்படுத்தலாம்.
தவறான தகவல்
ஆதாரில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி விவரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் ஆதார் புதுப்பித்தல் செய்யக்கூடாது. அப்படி ஆதாரில் ஏதேனும் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற தவறுகள் இருப்பின் முதலில் அதனை சரி செய்து திருத்தங்கள் செய்த பிறகு கூடுதல் ஆவணங்கள் மூலம் ஆதாரை புதுப்பிக்க வேண்டும். ஆதாரில் உள்ள அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் மட்டும், பெயர் மற்றும் பிறந்த தேதி, முகவரி ஆகியவற்றை உறுதி செய்து கூடுதல் ஆவணங்கள் வைத்து ஆதாரை புதுப்பித்து ஆதாரை இன்னும் பலப்படுத்தலாம்.
பயோமெட்ரிக்
எனவே உடனடியாக பொதுமக்கள் செய்ய வேண்டியது ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா? என ஒரு முறை சோதனை செய்து கொண்டு பிறகு ஆதாரை அப்பேட் செய்யுங்கள். இப்போது இன்னொரு பிரச்சனை பலருக்கும் இருக்கிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும் அல்லது ஆதாரை வைத்து பணம் எடுக்கும் போதும், கைரேகை எடுக்கவில்லை என்று கூறியதால் நாங்கள் ஏற்கனவே பயோமெட்ரிக் அப்டேட் என்று சொல்லக்கூடிய கைரேகை மற்றும் புகைப்படத்தை மாற்றி விட்டோம். புதுப்பித்து விட்டோம். மேலும் செல்போன் எண்ணையும் மாற்றி புதிதாக புதுப்பித்துவிட்டோம் புது ஆதார் அட்டையும் வாங்கிவிட்டோம், மேலும் எந்த தவறும் இல்லாமல் இருக்கும் ஆதாரை திரும்பவும் எப்படி புதுப்பித்தல் செய்வது? என்பதும் பலரது கேள்வியாக உள்ளது.
ஆதார் புதுப்பிப்பு
10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பழைய ரேஷன்கார்டுகளை வைத்தும், பழைய டி.என்.என்று தொடங்கக்கூடிய வாக்காளர் அட்டையை வைத்தும் ஆதார் பதிவு செய்தார்கள். அப்போது இருந்த பழைய ரேஷன்கார்டுகள் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றப்பட்டது. டி.என். என்று தொடங்கக்கூடிய வாக்காளர் அட்டை செயலிழந்து அதற்கு மாற்றாக புதிய எண் வழங்கப்பட்டதால் தற்போது ஆதாரில் உள்ள விவரங்களை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ஆவணங்கள் எதுவும் ஆதார் ஆணையத்தில் இல்லை. எனவே தான் இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு தற்போது புதிய ஆவணங்களை ஆதாரோடு இணைத்து புதுப்பிக்க கோரி உள்ளனர். அதற்காகத்தான் ஜூன் 14ம் தேதி வரை கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.