மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய வீரமங்கை ராணி வேலுநாச்சியாரை வணங்குகிறேன் - மோடி தமிழில் ட்வீட்
அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின்ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி: வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும் என்று பிரதமர் மோடி குற்றிப்பிட்டுளளார். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜான்சிராணிக்கு முன்னர் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வேலுநாச்சியார் என்பது பலரும் அறியப்பட வேண்டிய உண்மை.
ராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி அவர்களுக்கும் சக்கந்தி முத்தாத்தாள் அம்மாளுக்கும் 1730 ஆம் ஆண்டில் ஒரே பெண் மகளாக வேலுநாச்சியார் பிறந்தார்.
பெண்ணாக இவர் பிறந்தாலும் ஓர் ஆண் வாரிசாக வளர்க்கப்பட்டார். கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். பல மொழிகளையும் கற்று திறமைசாலியாகவும் திகழ்ந்தார்.
இளம் வயதிலேயே சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரை 16-வது வயதில் மணந்து, பட்டத்து ராணியானார். வடுகநாதர், ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்ததால், ஆங்கிலேயப் படையின் உதவியோடு நவாபின் படைகள் சிவகங்கை மீது போர் தொடுத்தன.
காளையார்கோவிலில் இருந்த மன்னர் வடுகநாதரை திடீரென்று தாக்கிக் கொன்று, காளையார்கோட்டையை தங்கள் வசப்படுத்தினர். நவாப் படைகளிடம் தப்பித்த வேலுநாச்சியார் சின்ன மருது, பெரிய மருது துணையோடு, தப்பிச் சென்று ஹைதர் அலியின் உதவியை நாடினார் ராணி. ஆங்கிலப் படையை அழித்து, நவாபை வீழ்த்தி, சிவகங்கைச் சீமையில் தங்கள் அனுமன் கொடியை மீண்டும் பறக்க விடுவது என்று சபதமேற்றார். அதற்கான கால நேரம் பார்த்து காத்திருந்தார்.
ஹைதர் அலியின் உதவியும் கிடைத்தது. ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சி கோட்டை, அய்யம்பாளையம் என இடம் மாறி மாறி முகாமிட்டு ஆங்கிலேயரை அடித்து விரட்ட தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, சேனாதிபதிகள் மருது சகோதரர்களை அழைத்துக்கொண்டு குறுநில மன்னர்களை ஒன்றுசேர்த்துப் போராடப் பல இடங்களுக்கும் சென்றார். 1780ஆம் ஆண்டில் ஹைதர் அலியின் படையைத் தலைமை ஏற்று நடத்திச் சென்றார். தன் படைகளை மூன்றாகப் பிரித்து, மும்முனைத் தாக்குதல் நடத்தி வெற்றி வாகை சூடினார் வீர மங்கை ராணி வேலுநாச்சியார்.

விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். வேலு நாச்சியாரும் அவரது மகளிர் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் புகுந்து, திடீர் தாக்குதல் நடத்தி கோட்டையைக் கைப்பற்றினர்.
சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த வெற்றி கிடைத்தபோது இந்த வீரமங்கைக்கு 50 வயது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர்தான்! ஆங்கிலேயேரின் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டது. சிவகங்கை அரசியாகப் பதவியேற்றார்.
வீரம்மிக்க பெண்மணியான வேலுநாச்சியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட்டியுள்ளார்.
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன் என்று கூறியுள்ள மோடி, அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும் என்று பதிவிட்டுள்ளார். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என்றும் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications