இந்து என்றாலே அவருக்கு தேச பக்தி இருக்கும்... அதுதான் இயற்கை.... ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
டெல்லி: ஒருவர் இந்து என்றாலே அவருக்குத் தேச பக்தி இருக்கும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று ஜே.கே.பஜாஜ் மற்றும் எம்.டி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் எழுதிய "Making of a Hindu Patriot: Background of Gandhiji's Hind Swaraj" என புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "இங்கிருக்கும் பலரும் காந்தியைப் போல நடந்து கொள்ள முயல்கின்றனர். ஆனால், அது முடியாது. அவரைப் போன்ற சிறந்த ஆளுமைகளாக யாராலும் இருக்க முடியாது" என்றார்.
தர்மமும் தேச பக்தியும் வேறு வேறானதல்ல
புத்தகத்தை வெளியிட்ட பின் பேசிய அவர், "இது காந்தி குறித்து வெளியான புத்தங்களிலேயே முக்கியமானது. காந்தியைப் பொறுத்தவரை, அவரின் தர்மமும் தேச பக்தியும் வேறு வேறானதல்ல. ஆன்மீக சிந்தனையிலிருந்தே ஒருவருக்குத் தாய்நாட்டின் மீதான அன்பு தோன்றும் என்பது அவரது கருத்து. அதாவது தர்மத்திலிருந்துதான் தேசபக்தி உருவாகிறது என்பது அவரது கூற்று. தர்மம் என்பது மதம் மட்டுமல்ல, அது மதங்களைவிடப் பரந்ததாகும் எனறு காந்தியாரே கூறியிருந்தார்" என்றார்.
இந்துக்களுக்குத் தேச பக்தி இருக்கும்
தொடர்ந்து தேச பக்தி குறித்துப் பேசிய அவர், "ஒருவர் இந்து என்றாலே அவருக்குத் தேச பக்தி இருக்கும். இது இயற்கையானது, இதுவே இந்துக்களின் இயல்பான குணம். சில சமயங்களில் இந்துக்களின் தேச பக்தியைத் தட்டி எழுப்ப வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், இந்துவாக இருப்பவர், ஒருபோதும் தேச விரோதியாக இருக்கமாட்டார்.
தேச பக்தி என்றால் என்ன
நாம் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் ஒரு தேசத்தை விரும்புகிறார் என்றால், அவர் அதன் நிலத்தை மட்டும் விரும்புகிறார் எனும் பொருள் இல்லை. அங்குள்ள மக்கள் , ஆறுகள், கலாசாரம், பாரம்பரியங்கள் என அனைத்தையும் விரும்புகிறார் என்றே பொருள்.
அனைத்து மதங்களுக்குமான ஒரு மதம்
மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே இந்து மதம் நம்புகிறது. நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை என்பது பிரிவினைவாதம் என்று நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அனைத்து மதங்களுக்குமான ஒரு மதமே இந்து மதம் என்பதை மகாத்மா காந்தி தீர்கமாக நம்பினார்" என்றார்.