மோடி - அம்பேத்கர் ஒப்பீடு.. மத்திய அரசு வெளியிடும் ‘சர்ச்சை’ புத்தகம்! பங்கேற்கும் “எம்.பி” இளையராஜா
டெல்லி: பிரபல இசையமைப்பாளார் இளையராஜா கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பாராட்டி முன்னுரை எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் இளையராஜா கலந்துகொள்கிறார்.
இந்தியாவின் மூத்த முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், இந்தி என ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம் தயாரித்த "மோடியும் அம்பேத்கரும்" என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

மோடிக்கு பாராட்டு
அதில் அவர், "நதி நீர், பாசனம் தொடர்பான கொள்கை முடிவுகளை அண்ணல் அம்பேத்கர் வகுத்தார் என பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக ஒரு செய்தியை நான் படித்தேன். 2016 ஆம் ஆண்டு முதலீட்டாளர் மாநாட்டில் நதி நீர் மற்றும் பாசனம் குறித்த அமைப்புகள் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய பங்காற்றியவர் அம்பேத்கர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார். அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

அம்பேத்கர் மோடி ஒற்றுமை
அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது. பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி. " என குறிப்பிட்டுள்ளார்.

கடும் விமர்சனம்
இளையராஜாவின் இந்த கருத்துக்கு அரசியல்வாதிகள், திரையுலகை சேர்ந்தவர்கள் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இளையராஜா குடியரசுத் தலைவர் பதவிக்காகவோ அல்லது எம்.பி பதவிக்காகவோ இந்த கருத்தை தெரிவிப்பதாக பலர் விமர்சித்தனர். அதே நேரம் இளைராஜாவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை பதிவிட்டனர். குறிப்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

எம்.பி. பதவி
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமிக்கப்பட்டார். இதுகுறித்து பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "சாதாரண பின்னணியில் இருந்து வந்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார் இளையராஜா. இசையின் மூலம் மனித உணர்வுகளை அழகாய் பிரதிபலித்தவர் இளையராஜா. அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

புத்தக வெளியீடு
இந்த நிலையில் இளையராஜா முன்னுரை எழுதிய 'Ambedkar and Modi - Reformer's ideas, Performer's implementation' என்ற புத்தகத்தை மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை வெளியிடுகிறது. செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications