'வெண்ணை திரண்டு வரும்போது' வெடித்தது கோஷ்டி பூசல்.. ராஜஸ்தான் காங்கிரஸ் பரிதாபங்கள்
டெல்லி: ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சித் தலைவர் சச்சின் பைலட்டை தவிர்த்துவிட்டு, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டை முதல்வராக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் அங்கு உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.
காங்கிரசுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறிய நிலையில், இப்படி தகராறு நடப்பது அதன் தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக சச்சின் பைலட் உள்ளார்.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் சச்சின் பைலட் தான் முதல்வராகும் வாய்ப்பு இருப்பதாக இதுவரை கூறப்பட்டுவந்த நிலையில் அசோக் கெலாட் அந்த பதவியை அலங்கரிக்கும் வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[இதுவரை தொட்டதெல்லாம் வெற்றி கூட்டணிதான்.. மோடிக்கு கடும் சவாலாக உருவாகியுள்ள சந்திரபாபு நாயுடு!]

அடிதடி, மோதல்
இந்த தகவலை காங்கிரஸ் மேலிடம் ரகசியமாக வைத்திருக்க விரும்பிய போதிலும், அது வெளியே கசிந்து விட்டது. இதனால் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் மோதிக்கொள்வதும், ஒருவர் மீது ஒருவர் காவல்துறையில் புகார் தெரிவித்தும் வருகின்றனர். தலைமை கட்டுப்பாட்டை மீறி இந்த சண்டை அத்துமீறி சென்றுவிட்டது.

ஜாட் இனத்திற்கு முக்கியத்துவம்
சச்சின் பைலட்டை, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் மத்திய அமைச்சராக்கி கொள்வது என்று ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளாராம். ஆனால் அசோக் கெல்லாடிற்கு முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்பது ராகுல் காந்தி யோசனைதான் என்று காங்கிரஸ் மேலிடத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாட் இனத்தை சேர்ந்த ஒருவரைத் தான் முதல்வராக வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதும் குஜ்ஜார் மற்றும் மீனா ஆகிய கணிசமான மக்கள் தொகை கொண்ட முக்கிய ஜாதி பிரிவினரும் காங்கிரசை சேர்ந்த ஜாட் ஜாதி பிரிவினருக்கு எதிராக அணிதிரண்டு உள்ளனர்.

பாஜகவில் மீனா ஜாதி
மீனா இன பிரிவினரின் முக்கிய தலைவரான கிரோலி லால் மீனா, தனது கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்துக் கொண்டுள்ளார். இதனால் அந்த ஜாதி பிரிவினரின் வாக்குகளை பெறுவது என்பது காங்கிரஸுக்கு ஏற்கனவே கஷ்டமான ஒரு விஷயமாகத்தான் உள்ளது. ராஜஸ்தானில் மீனா இனத்தவர்கள் 7.5 சதவீதம் பேர் உள்ளனர்.

ஜாதி கணக்குகள்
குஜ்ஜார் இன மக்கள் மாநிலம் முழுவதும் பரவலாக உள்ளனர். சில தொகுதிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் அளவுக்கு வலுவான இனமாக உள்ளனர். ஆனால், ஜாட் இன மக்களுக்கும், குஜ்ஜார்களுக்கும் முரண்பாடுகள் இருந்து வருகின்றன. ராஜஸ்தானில் மட்டும் கிடையாது, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் இவ்விரு இனத்தவர்களுக்கும் ஏழாம் பொருத்தம்தான். எனவே சச்சின் பைலட்டை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி வாய்ப்பை பறிகொடுப்பதற்கு காங்கிரஸ் தயாராக இல்லை.

ராஜஸ்தானிலும் வந்தேறி கோஷம்
சச்சின் பைலட் ஒரு வந்தேறி என்று அவரது எதிர் முகாமில் உள்ளவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ராஜஸ்தானிலிருந்து அவர் எம்பியாகியிருந்தாலும், அவரது தந்தை ராஜஸ்தான் மாநில லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும் கூட, அவரது முன்னோர்களின் ஊர் என்பது உத்தரப்பிரதேசம். எனவே சச்சின் பைலட்டை மண்ணின் மைந்தராக ஏற்றுக்கொள்வதற்கு காங்கிரஸில் உள்ள அசோக் கெலாட் கோஷ்டி தயாராக இல்லை. ஒரு இளம் தலைவரான சச்சின் பைலட், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை திறம்பட வழிநடத்தி, கிட்டத்தட்ட இந்த தேர்தலில் கட்சியை ஆட்சியில் அமர வைக்கும் அளவுக்கு வலுவானதாக மாற்றி உள்ளார் என்ற நிலையிலும் கூட, அவருக்கு முதல்வர் பதவி தர ராகுல் காந்தி தயாராக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications