சீனாவுக்கு செக்... 371 பொருட்கள் தரக்கட்டுப்பாட்டுக்குள் வந்தது... இந்தியா சூப்பர் பிளான்!!
டெல்லி: இந்தியாவில் சீனாவின் தரமற்ற பொருட்களுக்கு செக் வைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 371 பொருட்கள் இந்திய தர நிர்ணய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் தரமானவையா என்று சோதித்த பின்னரே அனுமதிக்கப்படும்.
இந்த 371 பொருட்களில் பொம்மைகள், இரும்புக் கம்பிகள், இரும்பு குழாய்கள், நுகர்வோர் எலெக்ட்ரானிக் பொருட்கள், தொலைபேசி உபகரணங்கள், கனரக இயந்திரங்கள், பேப்பர், ரப்பர் பொருட்கள், பீங்கான் பொருட்கள் ஆகியவை தரக் கட்டுப்பாட்டு பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இரும்பு சகோதரர் பாகிஸ்தான் போல இருங்க...ஆப்கன் நேபாளுக்கு சீனா அழைப்பு!!
சீனாவின் தரமற்ற பொருள்
இந்திய தர நிர்ணய கட்டுப்பாட்டுக்குள் வரும் இந்தப் பொருட்கள் தரமற்றவையாக இருக்கும்பட்சத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது. கடந்தாண்டு இந்தப் பொருட்களை மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் அடையாளப்படுத்தி இருந்தது. உள்நாட்டில் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியப் பொருட்கள் உற்பத்தியை அதிகரித்து, வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதியை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா, சீனா இடையே புகைச்சல் ஏற்பட்டு இருக்கும் நிலையில், சீனாவின் மலிவான, தரமற்ற பொருட்களுக்கு செக் வைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கொச்சின் துறைமுகம்
இந்திய தர நிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் பிரமோத் குமார் திவாரி அளித்து இருக்கும் பேட்டியில், ''சீனாவின் தயாரிப்பு உள்பட 371 பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கண்ட்லா, ஜெஎன்பிடி, கொச்சின் ஆகிய துறைமுகங்களில் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
2021, மார்ச்சில் அமல்
வரும் டிசம்பர் மாதம் என்னென்ன கட்டுப்பாடுகள் என்பது வரையறுக்கப்பட்டு விடும். 2021, மார்ச் மாதம் இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். சுங்கவரி அதிகாரிகளுடன் இணைந்து சிறப்பு அதிகாரிகள் துறைமுகங்களில் சோதனையில் ஈடுபடுவார்கள். பொருட்கள் தரமானதாக இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2019-20களில் 20,000 ஆக இருந்த பரிசோதனைகள் நடப்பாண்டில் ஒரு லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 'ஒரு தேசம், ஒரு தரம்' என்ற கொள்கையும் அமல் செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
பொருட்கள் தயாரிப்பு தேதி
இந்திய தர நிர்ணய கட்டுப்பாட்டுக்கு என்று இரண்டு இணையதளங்களை மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் திறந்து வைத்தார். இதையடுத்து, எந்த நாட்டில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது, உற்பத்தி செய்யப்பட்ட நாள், காலக்கெடு ஆகியவற்றை குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.