இந்தியாவில் கொரோனா பாதிப்பு வரலாற்றில் இல்லாத புதிய உச்சம்! ஷாக் தரும் மாநிலங்கள்
டெல்லி: இந்தியாவில் வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை கொரோனா பாதிப்பு எட்டியுள்ளது. நேற்று கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,15,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 30ம் தேதி உச்சத்தில் இருந்த கொரோனா அதன்பிறகு படிப்படியாக குறைந்தது. உயிரிழப்பும் பெரிய அளவில் இல்லை. ஆனால் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 1,15,736 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்துள்ளது.. நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 59,856 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,17,92,135 ஆக உள்ளது.
தடுப்பூசி
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் 8,43,473 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரு நாளில் மட்டும் 630 பேர் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,66,177 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 8,70,77,474 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா
இந்தியாவில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 55,469 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,13,354 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 297 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பால் 56330 பேர் பலியாகி உள்ளனர்.
நிலைமை மோசம்
மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக சத்தீஸ்கரில் 9921பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 3,86,269 பேருக்கு தொற்று பாதித்துள்ளது நேற்று ஒரே நாளில் 53 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 4,416 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் நிலைமை மோசமாக உள்ளதாக மத்திய குழு விரைந்துள்ளது.
பெங்களூரு ஷாக்
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஒரே நாளில் 6150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,26,584 ஆக உயர்ந்துள்ளது.பெங்களூரு நகரில் நேற்று மட்டும் 4266 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா நிலவரம்
நாட்டின் தலைநகரான டெல்லியில் 5100 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 5895 பேருக்கும் கேரளாவில் 3502 பேருக்கும், ஆந்திராவில் 1941 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 2058 பேருக்கும், குஜராத்தில் 3280 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3722 பேருக்கும் தொற்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உச்சம்
தமிழகத்தில் 3645 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,07,124 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,809 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8,68,722 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மிக அதிகபட்சமாக 1285 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் தமிழகத்தில் 25,598 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். நேற்று ஒரு நாளில் மட்டும் 15 பேர் தமிழகத்தில் கொரோனாவால் இறந்துள்ளனர்.