சில மாதங்களில்.. 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி.. 3 கோடி பேருக்கு செலவை மத்திய அரசே ஏற்கும்- மோடி
டெல்லி: அடுத்து வரும் ஒரு சில மாதங்களில் 30 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதையே மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் வரும் ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சீரம் மற்றும் பாரத் பயேடெக் தடுப்பூசிகளுக்குக் கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது
மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

30 கோடி மக்களுக்குத் தடுப்பூசி
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், "கொரோனாவுக்கு எதிரான போரில் நம் இப்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளோம். அடுத்து வரும் ஒரு சில மாதங்களில் 30 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

செலவுகளை மத்திய அரசு ஏற்கும்
முதல்கட்டமாகக் காவல் துறையினர், துப்புரவுத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும். இதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு ஏற்கும்" என்றார்.

மத்திய அரசுத் திட்டம்
முதல்கட்டமாக ஒரு கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அதன்பின் மூன்றாம்கட்டமாக நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்பு உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் மத்திய அரசு கூறியுள்ளது.

முதல்கட்டமாக 3 கோடி பேருக்குத் தடுப்பூசி
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "நாடு முழுவதும் சுமார் 3 கோடி சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் உள்ளனர். முதல் கட்டமாக இவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் செலவுகளை மாநில அரசுகள் ஏற்க வேண்டியதில்லை. இந்த செலவுகளை மத்திய அரசே அரசு ஏற்கும்.

வதந்திகளைத் தடுக்க வேண்டும்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள் மிகவும் செலவு குறைந்தவை. மற்ற தடுப்பூசிகளைச் செலுத்தும் திட்டங்களிலிருந்து நமக்கு கிடைத்த அனுபவம் இதில் நமக்குப் பயன்படும். பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையா பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி குறித்துப் பரவும் வதந்திகளைத் தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications