இந்திய எம்.பி-க்கள் குறித்து சர்ச்சை பேச்சு - சிங்கப்பூர் பிரதமருக்கு வலுக்கும் கண்டனங்கள்!
டெல்லி: இந்திய எம்.பி-க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் பேசியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ''நேருவின் இந்தியாவில் தற்போது ஊடக அறிக்கைகளின்படி, மக்களவையில் கிட்டத்தட்டப் பாதி எம்.பி-க்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார்கள் நிலுவையில் உள்ளது.
மேலும் இந்திய எம்.பி-க்கள் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றாலும், இன்னும் இந்த நிலைதான் உள்ளது'' என்று பேசியிருந்தார்.
சிங்கப்பூர் பிரதமரின் இப்பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் உள்ள தூதரக அலுவலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வொங்கிற்கு சம்மன் அனுப்பி கடும் கண்டனத்தை பதிவு செய்தது.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் லீ சியென் லூங் பேசியதாவது, சுதந்திரத்திற்காகப் போராடி வென்றத் தலைவர்கள், பெரும் தைரியம், மகத்தான கலாசாரம் மற்றும் சிறந்த திறன் கொண்ட தலைவர்களாக வெளிப்பட்டனர்.
அவர்களில் டேவிட் பென்-குரியன்ஸ், ஜவஹர்லால் நேரு போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
புதிதாக ஒரு நாட்டை உருவாக்கும் தலைவர்கள், தங்கள் மக்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், தங்கள் மக்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அந்த தலைவர்கள் ஏற்படுத்திய உத்வேகத்தை அதற்கு அடுத்து வரும் தலைமுறை தக்கவைக்காமல் அதை அழித்துவிடுகிறது.
அரசியலின் அமைப்பு ஒவ்வொரு கட்டத்துக்கும் மாறிவருகிறது. அரசியல்வாதிகள் மீதான மரியாதை குறைந்து வருகிறது. வாக்காளர்களும் இதுதான் விதிமுறை என்று நினைக்கிறார்கள். தரம் குறைந்து, நம்பிக்கை சிதைந்து, நாடு அப்போது வீழ்ச்சியடையும்.
நேருவின் இந்தியாவில் தற்போது ஊடகங்கள் சொல்லும் செய்திகளின்படி, நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்டப் பாதி உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை தான் என்றாலும், இன்னும் இந்த நிலைதான் இந்தியாவில் உள்ளது.
அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் சிங்கப்பூரின் மரபைக் காப்பாற்ற வேண்டும், அதைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு நாம் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும், விதிகளைச் சரியாகச் செயல்படுத்தவேண்டும், அதே விதிகளை அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்த வேண்டும், யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று சிங்கப்பூர் பிரதமர் பேசியிருந்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரைப் புகழ்ந்து, தற்போதைய ஆட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிங்கப்பூர் பிரதமர் விமர்சித்திருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.