இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம்.. சவூதி அரேபியா டூ துருக்கி வரை.. இஸ்லாமிய நாடுகள் யாருக்கு ஆதரவு?
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், துருக்கி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு யார் பக்கம்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் குண்டு பாய்ந்து பலியாகினர். இதற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு தான் பொறுப்பேற்று உள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. விரைவில் பாகிஸ்தான் மீது நம் படை வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்துவது உறுதியாகி உள்ளது. இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் பட்சத்தில் மோதல் என்பது வலுப்பெறும்.
அப்படி மோதல் வலுத்தால் உலக நாடுகளில் பெரும்பாலானவை நம் நாட்டுக்கு ஆதரவாக வரலாம். சில நாடுகள் பாகிஸ்தான் பக்கம் சாயலாம். மேலும் இன்னும் குறிப்பிட்ட நாடுகள் மோதலை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று நடுநிலை வகிக்கலாம். இருப்பினும் கூட கடந்த 22ம் தேதி முதல் இன்று வரை நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் தொடரும் நிலையில் முக்கிய இஸ்லாமிய நாடுகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது. ஒருவேளை நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடந்தால் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், துருக்கி உள்பட முக்கிய இஸ்லாமிய நாடுகள் யார் பக்கம் நிற்பார்கள்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
சவூதி அரேபியா: சவூதி அரேபியாவுக்கும், நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இந்த நாடுகளில் நம் நாட்டை சேர்ந்த நிறைய பேர் வேலை செய்து வருகின்றனர். இருநாடுகள் இடையே வர்த்தகம், எரிசக்தி உள்பட பல துறைகளில் நல்ல உறவு என்பது உள்ளது. இருப்பினும் கூட இந்த நாடு தற்போது வரை பஹல்காம் தாக்குதல் விஷயத்தில் பாகிஸ்தானை கடுமையாக கண்டிக்கவில்லை. காஷ்மீர் என்பது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை என்று சவூதி அரேபியா நிற்கிறது. அதோடு சர்ச்சையில் சிக்குவதை பொதுவாக சவூதி அரேபியா விரும்புவது இல்லை. மேலும் ‛விஷன் 2030' என்ற திட்டத்துக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. இதற்கு நம் நாட்டுடன் நல்ல வர்த்தக உறவை வைத்திருப்பது முக்கியம். இதனால் சவூதி அரேபியா இந்தியாவை எதிர்க்காது. அதேவேளையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செல்லாது. மாறாக பிரச்சனையை பேசி தீர்க்க வலியுறுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
கத்தார்: கத்தாரை எடுத்து கொண்டால் தற்போது வரை நடுநிலை தான் வகித்து வருகிறது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவிக்கவில்லை. கத்தாருக்கும், நமக்கும் இடையே வர்த்தகம், எரிசக்தி துறைகளில் நல்ல உறவு உள்ளது. சவூதி அரேபியாவை போல் கத்தாரிலும் நம் நாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமாக பணி செய்கின்றனர். கத்தாருக்கு நம்நாட்டு வர்த்தகம் மூலம் நல்ல நிதி கிடைக்கிறது. இதனால் கத்தார் நம் நாட்டை எதிர்க்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ஐக்கிய அரபு எமிரேட்சுக்கும், நமக்கும் இடையே நல்ல பந்தம் உள்ளது. இருப்பினும் பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீரை நிறுத்துவதாக அறிவித்ததை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கண்டித்தது. அதேவேளையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸை எடுத்து கொண்டால் 85 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நம் நாட்டுடன் வர்த்தகம் செய்து வருகிறது. அதேபோல் நம் நாட்டை சேர்நதவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். முதலீடு செய்து வருகின்றனர். இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சும் நம் நாட்டை பகைக்க வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.
ஈரான்: ஈரானுக்கும், நமக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. ஈரானும், நாமும் கடல்வழி வர்த்தகத்தில் முன்னேறி வருகிறோம். குறிப்பாக சாபஹார் துறைமுக திட்டத்தில் இருநாடுகளும் சேர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஈரான் மீது தற்போது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ஈரானுக்கு நாம் மிகவும் முக்கிய நாடாக இருக்கிறோம்.
இதனால் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் வெடித்த உடனே முதல் நாடாக மத்தியஸ்தம் செய்ய தயார் என்று ஈரான் அறிவித்தது. ஈரானை பொறுத்தவரை நம் நாட்டை பகைத்து கொள்ள விரும்பவில்லை. அதேவேளையில் பாகிஸ்தானுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவிக்கவில்லை. இருநாடுகள் இடையே பிரச்சனை, மோதல் வேண்டாம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி சமாளித்து கொள்ளுங்கள். இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
துருக்கி: துருக்கியை எடுத்து கொண்டால் இது பாகிஸ்தான் பக்கம் நிற்கிறது. காஷ்மீர் பிரச்சனை வரும்போதெல்லாம் நம்நாட்டுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் தான் துருக்கி இருந்து இருக்கிறது. அதோடு பாகிஸ்தானுக்கும், துருக்கிற்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டில் துருக்கி நம் நாட்டுடன் 10 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் செய்துள்ளது. இருப்பினும் காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் நிலைப்பாடு பாகிஸ்தான் பக்கம் தான் இருக்கிறது. இப்போது பதற்றத்துக்கு நடுவே கூட சில நாட்களுக்கு முன்பு 6 போர் விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்கின. துருக்கியில் இருந்து ஆயுதங்கள் இறக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதனை துருக்கி முற்றிலுமாக மறுத்தது. எரிபொருள் நிரப்பவே விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியதாக தெரிவித்தது. இருப்பினும் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் என்று வந்தால் துருக்கி, பாகிஸ்தான் பக்கம் சாயலாம் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications